2002-2008 டைரிக் குறிப்புகள்

>> Friday, May 30, 2008


ஒர் வேனிற்கால மதிய வேளை...

இப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறாயா?
எதிர்ப்படும் எல்லோருக்குமான புன்னகை இன்னும் மீதமிருக்கிறதா?
சடுதியில் மாறும் காட்சிகள் கொண்ட அறைக்கு வண்ணம் பூசியாயிற்றா?
பிடித்த நடிகை இன்னும் சிநேகாதானா?
சாப்பிடுவது அதே மேரி மெஸ்ஸில்தானே?
ரமணி சந்திரன் சிவசங்கரி படிக்கச் சொல்லி தோழிக்கு சிபாரிசு செய்கிறாயா?
கைகளை ஆட்டி அபிநயங்களோடு பேசுவதை நிறுத்தவில்லைதானே?
‘நெஞ்சமொருமுறை நீ என்றது’ பாடலை முணுமுணுக்கிறாயா?
டோனாபோலாவில் எடுத்த குரூப் ஃபோட்டோ சூட்கேசில் இருக்கிறதா?
.
.
.
இப்போது உயிரோடு இருக்கிறாயா?

*************

மின்சாரம் தடைப்பட்ட பின்னிரவில்...

புறக்கணிக்கப்பட்ட அன்பின் பொதிகளை
ஒரு குழந்தையென நீ சுமந்து திரிவதை
என்னால் தடுக்கமுடியவில்லை.
கைப்பையைத் திறக்கிறாய்...
விடியவே முடியாத இரவுகள்
வரிசைக்கிரமமாய் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒன்றை எடுத்து உதறுகிறாய்
வானிலிருந்து சில நட்சத்திரங்கள் உதிர்வதை
காப்பாற்ற முடியவில்லை.
வாழ்வின் கசப்பான பக்கங்களை நத்தையின்
வேகத்தில் வாசிக்கத்துவங்கி
பெருங்குன்றொன்றின் மீதேறுகிறேன்
சமவெளிகளின் மகத்துவம் தெரியாமல்
என்னைக் காப்பாற்ற வருபவன் கல்லாய் சமையட்டும்.

*************
பருவமழை தொடங்க சில தினங்களே இருக்கும் இன்று...

மிதமிஞ்சிய குற்றவுணர்வுடன்
இதை எழுதிக்கொண்டிருப்பதாய் கூறுவது
நான் கொலையுறுவதற்கு சரியான காரணமாய் இருக்கக்கூடும்.
எனக்கு வாய்த்த சபிக்கப்பட்ட
வாழ்வின் பங்காய்
உனக்கு அன்பைத் தராவிடினும்
காயங்களைத் தராமலிருந்திருக்கலாம்
ஏமாற்றங்கள் அற்ற
துரோகங்கள் அற்ற
பாசாங்குகள் அற்ற
வஞ்சனைகள் அற்ற பெருவெளியில்
அன்பால் நிரம்பிய மேகம் ஒன்றை
இழுத்துச் செல்கிறது சிற்றெறும்பு
கார்காலம் தொடங்குமுன்
புற்றை நிரப்பிவிடும் பேராசையோடு.



Read more...

புலன்களில் விளைவது…

>> Tuesday, May 27, 2008


காணக்கிடைக்காத வேலைப்பாடுகளுடன்
அரியதொரு தேநீர் கோப்பை ஒன்று
என் உணவு மேசையின் மீதிருந்தது
யார் வைத்தது என்றேன்
பதிலில்லை.
அதில் நீர் அருந்தினேன்,குறையவில்லை.
உணவு, மாமிசம், மது, பெண்…
நிரப்பிய எதுவுமே குறையவில்லை
பசி தாகம் போதை, காமம்
எதுவும் எனக்குத் தோன்றவில்லை.
கடவுளின் நான்காவது உலகினின்று
தவறி விழுந்த கோப்பை அது எனப்புரிந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய்
நான் கல்லாகிக் கொண்டிருப்பதாய்
உடனிருப்பவர்கள் கூறினர்.
கோப்பையில் துளையிட்டால்
புலன்கள் வேலை செய்யும் என
சந்தித்த தேவதை கூறியது.
துளையிட்டேன்…மனிதனானேன்.
அன்றிலிருந்து கடவுளின்- துளையிட்ட
தேநீர் கோப்பையுடன் மட்டுமே நான்.



Read more...

நிலா நாள் வீடு


பெளர்ணமி நிலா காய்கிறது
முற்றத்தில் பூனைக்குட்டிகளின் சத்தம்
ஒன்றன் மீது ஒன்று தாவி
பொய்யாய்க் கடித்து
ஓடி-நின்று–மறுகி-ஓடி
களியாட்டம்.
திரைச்சீலைகளை இழுத்துவிட்டு வந்து படுத்தேன்
என்ன பேசுவதென்று தெரியவில்லை
அருகில் படுத்திருக்கும் தனிமையை எழுப்பி.



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP