இங்கே ஒரு காதல் கதை 7 - 11

>> Wednesday, December 29, 2010




2009ன் இறுதி மாதங்களில் ஒன்று

நீண்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு நெருங்கிய கல்லூரி நண்பனை சென்னையின் புகழ்பெற்ற சனநெருக்கடி தெருவில் யதார்த்தமாய் சந்தித்தேன். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு ‘ஷீ இஸ் மை வொய்ஃப்’ என குழந்தையுடன் வந்து கொண்டிருந்த பெண்ணைக் காட்டி அறிமுகப்படுத்தினான். ‘வணக்கங்க’ ‘வணக்கம்’. திரும்பி நண்பனைப் பார்த்தேன். ‘ரொம்ப டஸ்டா இருக்கு மாப்ள இந்த தெரு’ என்று கண்களில் தூசு விழுந்த பாவனைகளுடன் திரும்பிக்கொண்டான். கல்லூரி காலத்தில் இருவரும் பகிர்ந்துகொண்ட நேவி கட்டின் சாம்பல் இங்கு வந்திருக்க நியாயமில்லை. ‘ஈவ்னிங் மீட் பண்ணுறோம் மாப்ள’ என்றவாறு எண்களைப் பரிமாறிக்கொண்டோம். ‘அண்ணா, வீட்டுக்கு வாங்கண்ணா” வெள்ளந்தியாய் சிரித்தது அந்தப் பெண். ‘ கண்டிப்பா வர்றேம்மா, இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.’

மாலை. நான்கு ரவுண்ட் மார்ஃபியஸும் சில சிகரெட்டுகளும் கரைந்து மதுக்கூடத்தின் கூரை வழியே கசிந்துகொண்டிருக்கும் மெல்லிய இசையை உணரத்துவங்கிய நேரம். வந்ததில் இருந்து நிலவிய மெளனத்தை நொறுக்கி உடைந்து மெலிதாய் அழத்துவங்கினான்.

‘மச்சி, என் மேல தப்பு இல்லடா’

‘ங்கோத்தா... முதல்ல இப்டி ஸ்கூல் பையனாட்டம் பேசுறத விட்று. எம்மேல தப்பில்ல. அவதான் காரணம்னு எஸ்கேப் ஆகி ஓடுறத நிறுத்து.’

‘உண்மையிலயே மச்சி. எம்மேல...’

‘கேனக்..., நிறுத்துடா. அவ உன்னை எவ்வளோ லவ் பண்ணானு எனக்குத் தெரியும்’

‘நானுந்தான் பண்ணேன்’

‘அப்புறம் என்ன மயித்துக்கு இன்னொரு பொண்ண...நல்லா வாயில வருது. பாவம்டா அந்தப் பொண்ணு. அப்பாவியா இருக்குடா. அட்லீஸ்ட் அவகிட்டயாது புருஷனுக்கான அன்போட இரு’

‘அப்படிதான் மச்சி இருக்கேன். இன்னொரு லார்ஜ் சொல்லு’

‘தாங்குவியா?’

‘யேய் மயிரு, பரங்கிப்பேட்டைல ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஃபுல்லை முடிச்சுட்டு நைட்டெல்லாம் சரக்கு தேடி அலைஞ்சதை மறந்திட்டியா?’

‘நான் ஒன்னும் பழச மறக்கிறவன் இல்ல’

‘ இங்க பார்றா. டபுள் மீனிங்ல பேசுறாராம். டேய் பாடு..டேய் இங்க பாரு, நான் ஒன்னும் அவள வேணான்னு சொல்லல. த்தா, அவதான் எதுவுமே வேணாம்னு சொன்னா.’

‘எப்போ?’

‘நீ ஃபாரின் போய்ட்ட. எங்க யாரையும் ஒரு மயிருக்கு மதிச்சுக் கூட போன் பண்ணல. என்ன நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம பெரிய புடுங்கியாட்டம் அவளுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு என்னப் புடிச்சு காய்ச்சுற?’

‘சரிடா. என்ன ஆச்சு? நல்லாதான இருந்தீங்க’

‘தெர்லடா. திடீர்னு ஒரு நாள் வீட்ல கூப்பிடுறாங்கன்னு ஊருக்குப் போயிட்டு வந்தா. டிபார்ட்மெண்டுக்கு காலையிலயே வரச்சொன்னா. போனேன். இது சரியா வராது. வேணாம். விட்ரலாம்னு சொன்னா. செம கடுப்பாயிட்டேன். வாக்குவாதம் முத்திடுச்சு. இனிமேல் என்கிட்ட வரம்பு மீறிப் பேசுனா ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் கொடுத்துருவேன்னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போயிட்டே இருந்தா மச்சி..!’

‘ம்,ம். அப்புறம் என்ன ஆச்சு?’

‘அத்துக்குச்சு. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணினேன். ஒன்னும் சரியா வரலை. ப்ராஜக்ட் முடிச்ச அடுத்த மாசமே நல்ல வெயிட்டான பார்ட்டி ஒருத்தனை கல்யாணம் பண்னிக்கிட்டு செட்டில் ஆயிட்டா.’

‘ஓஹ்’

‘மாப்ள, ..த்தா அவளுக்காக நான் M.Tech சீட்டை வேணாம்னு சொன்னவன்டா’

‘சரி மாப்ள. ஃப்ரீயா விடு. அதான் நீயும் குடும்பம், குழந்தைனு செட்டில் ஆகிட்டல்ல.
ஓநாயா இருந்து பார்த்தாத்தான் குழந்தையை சாப்பிட்டதுக்கான தர்க்க நியாயங்கள் புரியும்’

‘திரும்ப அவளுக்கு சப்போர்ட் பண்றியா?’

‘மாப்ள, என்னோட கோபம் என்னங்குறது உனக்குப் புரியல. எனக்கு நீயும் ஃபிரெண்ட், அவளும் ஃபிரெண்ட். ரெண்டுபேரும் லவ் பண்ணீங்க. சேர்ந்து வாழ்ந்துட்டு இருப்பீங்கன்னு இவ்வளவு நாள் நம்பிட்டுருந்தேன். “அப்படிலாம் எதிர்பார்க்காத ராசா”னு வாழ்க்கை பொட்டுல அடிச்சுப் புரிய வச்சுருக்கு. ஒன்ஸ் அகைய்ன் ஐ காட் தி ஃப்ரூஃப். நிரந்தரமானது, புனிதமானதுனுலாம் ஒரு மயிரும் கிடையாது. வாழ்க்கையோட நடப்பையும், இயல்பையும் சொன்னா அவளுக்கு சப்போர்ட் பண்றதா அர்த்தமில்லை.’


டிசம்பர் இறுதி, 2003 - நண்பனின் டைரியில் இருந்து...

நூறு மீட்டர் தூரத்தில் ஓவியத்தின் அமைதியுடன் தளும்பிக்கொண்டிருக்கும் கடல். பெயர் தெரியாத கண்டம் தாண்டும் பறவைகளின் கலவையான ஒலியில் மிதக்கும் முகத்துவாரத்தின் அருகிலுள்ள ஆலமரத்தடியில் நின்று கொண்டிருக்கிறேன். தூரத்துக் கடலில் புள்ளியாய் நகர்ந்து செல்லும் சில வத்தைகள். என்னைத் தவிர துறை வளாகத்தினுள் யாரும் இல்லை.

பல்கலைகழகத்தேர்வுகள் முடிந்து விடப்பட்டிருக்கும் ஒரு வார விடுமுறையை ஊருக்குப் போகாமல் ‘ப்ராஜக்ட்’ குறித்தான கலந்துரையாடலில் கழிப்பதாய் வகுப்பு தோழர்கள் யாவரும் முடிவு செய்திருந்தோம். என்னால் அதில் முழுமையாகக் கலந்து கொள்ள முடியாது. GATE நுழைவுத் தேர்வு இருக்கிறது. நாளை இரவு சென்னை கிளம்பவேண்டும். அதற்கு முன்னால் இன்றே வந்து சந்திக்கும்படி உன்னிடமிருந்து திருப்பதி கம்பெனிக்கு போன். நான் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாயிற்று. இதோ “பறந்து விடுவாளோ!” என எண்ணத் தோன்றும் தேவதையாய், பறக்கும் கூந்தலுடன் கடற்கரை மணலில் பாதங்கள் புதைய புதைய நடந்து வருகிறாய்.

‘சாரிடா குட்டி. லேட் ஆய்டுச்சு’

‘இன்னும் கொஞ்சம் லேட்டா வந்துருந்தேன்னா என்னைச் சுத்தி விழுது விட்ருக்கும்’

‘ஒஹோ, சார் கொஞ்ச நேரம் கூட காத்திருக்கமாட்டீங்களோ?’

‘ரொம்ப சிலிர்த்துக்காதடி, சும்மாதான் சொன்னேன்’

‘அந்த பயம் இருக்கட்டும். நாளைக்குதான சென்னைக்கு?’

‘ஆமா, நாளைக்கு நைட்’

‘தங்குறது கன்ஃபார்மா?’

‘ம், நம்ம சீனியர் நளினி வந்து கூப்பிட்டு போறேன்னு சொல்லிருக்காங்க. ஒன்னும் பிரச்னை இல்ல’

‘அவ வீட்ல தங்குறதோட நிறுத்திக்கோ. அவ கூட சுத்துனதா தெரிஞ்சுச்சு... அறுத்துறுவேன்’

‘ஏய், ஏன்டி அசிங்கமா பேசுற?’

‘ஓ! அவள சொன்னோன்னே சாருக்கு கோபம் வருது? என்ன?’

‘சீ, அப்படிலாம் இல்லை. நீயா ஏன் சும்மா..?’

‘டேய் தெரியும்டா. நீ மெட்ராஸ்ல என்னென்ன ப்ளான் வச்சுருக்கேன்னு.’
‘இப்படி கூப்பிட்டு வச்சு கடுப்படிக்கதான் காலங்காத்தால போன் பண்ணி வரச்சொன்னியா?’
‘ஹேய், சாரிடா குட்டி. சும்மா விளையாட்டுக்கு... வம்பிழுத்தேன்டா. சரி, செலவுக்கு காசு வச்சிருக்கியா?’

‘ 700 ரூபா இருக்கு. போதும்னு நினைக்கிறேன்.’

‘இந்தா. இதையும் வச்சுக்கோ’ என்றவாறு என் கைகளில் 200 ரூபாயைத் திணித்தாய். அது முழுக்க உனது உள்ளங்கை வியர்வையில் நனைந்திருந்தது. சாதாரண பணத்தாளின் மீது கூட உனது பிரத்யேகமான வாசத்தைப் பரிமாற்றம் செய்யும் விரல்கள் நிச்சயம் வரம் பெற்றிருக்கக்கூடும்.

‘இதெல்லாம் வேணான்டி. நீயே வச்சுக்கோ. ஒரு நிமிசம் இரு, முந்தாநேத்து கூட செலவுக்குப் பணம் இல்லைனு சொல்லிட்ருந்த. இப்போ எப்படி?’

‘இல்லடா, அம்மா மெஸ்பில்லுக்கு பணம் அனுப்பிருக்காங்க. அதுலயிருந்துதான் கொடுத்தேன். வார்டன்கிட்ட அடுத்த மாசம் சேர்த்து கட்டுறேன்னு சொல்லிருக்கேன்’

பெண்ணின் சுயநலமில்லாத அன்பு ஒரு ஆணை எப்படி பொறி கலங்கவைத்து பித்தாக்கும் என்பதற்கு அன்று இடம், பொருள், ஏவல் மறந்து உன்னை இழுத்து, திரும்பிப் பார்த்த சில கடற் பறவைகளுக்கு முன்பாக முத்தமிட்டதே சாட்சி.

‘டேய், எக்ஸாம் நல்லாப் பண்ணு. நீ ரெண்டு வருசத்துக்குள்ள M.tech முடிச்சு, காம்பஸ்ல செலக்ட் ஆகணும். நானும் நெக்ஸ்ட் இயர் M.Phil போட்டேன்னா ஒன்றரை வருஷத்தை இழுத்துருவேன். அதுக்கு மேல தாங்காதுடா. ப்ளீஸ், என்னைய கைவிட்றாத. செத்துருவேன். எக்ஸாம் எழுதும் போது என் முகத்தை ஞாபகத்தில வச்சுக்கோ.’

‘ஏய் லூசு ஏன்டி இப்படிலாம் பேசுற. கண்டிப்பா ரெண்டு வருசத்துல நம்ம கல்யாணம் நடக்கும். இப்போ அழுகாம சிரிச்சுக்கிட்டே டாட்டா சொல்லு பாப்போம்’

நவம்பர் 2010

நண்பனுடனான சந்திப்புக்கு சுமார் ஓராண்டுக்குப் பிறகு பெங்களூருவின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் தோழியைப் பார்த்தேன். என்னைக் கடந்து கணவனுடன் கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தாள். பார்த்தாளா இல்லை பார்க்காதது போல் செல்கிறாளா என்கிற சந்தேகத்துடன் திரும்பி பார்த்தபொழுது இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்திருந்தவள், அந்த கணம் மாத்திரம் கண்களில் ஒரு சிரிப்பை காட்டிவிட்டு சடுதியில் தன்னைப் பூட்டிக்கொண்டுவிட்டாள். அப்போது தோன்றியது, “தேவகுமாரர்களுக்கு மட்டுமில்லை, தேவதைகளுக்கும் ஆயுள் குறைவுதான்.”


செப்டம்பர் 2005, நண்பனின் டைரியில் இருந்து...

பொங்கிப் பரவும் வியர்வை மணத்துடனும், சுமக்கவியலா பாரத்துடனும் ஏதேனும் ரூபாய் நோட்டு உங்கள் பழைய டைரியிலோ, வேண்டுமென்றே சாவி தொலைக்கப்பட்ட மேசை டிராயரினுளோ இருக்குமாயின் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். உங்களுக்கு ஒருபோதும் இளைப்பாறுதல் கிடையாது.



Read more...

நாவலோ நாவல்

>> Wednesday, December 22, 2010



காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில், மதுரை செல்லும் பேருந்து நிற்பதற்கான மேடை. மழை தூறிக்கொண்டிருந்த அந்த சோம்பேறியான நண்பகலில் மாடுகள் துள்ளல் நடைபோட்டுக் கொண்டிருந்தன. சென்ற வாரம் உள்துறை அமைச்சர் வந்த போது ஒட்டப்பட்டிருந்த தரமான தாளில் அச்சடிக்கப்பட்ட வரவேற்பு போஸ்டரை ஒரு மாடு நக்கி மேய்ந்துவிட்டு உற்சாகமாக ‘ம்ம்ம்மாஆஆஆ’ சத்தம் எழுப்பியபடி இருந்தது. நல்ல நிறைவான மதிய உணவுக்குப் பின்னர் தூக்கம் தூக்கும் நொடியில் நம்மிடமிருந்து ஆசுவாசமான சாந்திப் பெருமூச்சொன்று வருமே, அதன் ஒத்ததிர்வு. காஷ்மீர் கலவரம்- நக்சல் போராளிகள், என்று உரலுக்கும் உலக்கைக்கும் இடையில் தலையைக் கொடுத்து மாட்டிக்கொண்டிருக்கும் அமைச்சருக்கு தான் ஒரு கால்நடைக்காவது உதவியாய் இருப்பது தெரிந்தால் உணவளித்த திருப்தியும், புண்ணியமும் கிடைக்க எல்லாம் வல்ல அன்னையிடம் பிரார்த்திக்கவும் கூடும்.

கலவையான ஒலிகளோடும், அடித்த ஹாரனில் கலவரமாகி சிதறிய மக்களின் வசைகளோடும் மதுரை செல்லும் சோமு வந்து நின்றது.

‘மைய்ரை’ ‘மைய்ரை’ ‘மைய்ரை’...

முன்னால் நின்ற ஆளில்லாத அரசுப்பேருந்தை எக்கித்தள்ளி முழுமையான ஆக்கிரமிப்பு.

நிற்க... ‘மைய்ரை’ என்பது ‘மதுரை’ என்று வழங்கப்படும் மூவாயிரமாண்டு தொல்நகரின் ‘நடத்துனர் மரூஉ’ என்று அறிக. நடத்துனர்களின் மொழி எப்போதும் அலாதியானது. எப்பேர்ப்பட்ட ஊரின் பெயரும் இவர்களிடம் அதன் அப்ரிவேஷனைக் கண்டடைந்துவிடும். ‘கான்ஸ்டாண்டிநோபிள்’ போன்ற நகரின் பெயர்களும் இவர்களுக்கு விலக்காகாது என்பது என் அனுமானம். சமயங்களில் வில்லங்கங்களும் நிகழ்ந்தேறும். தஞ்சாவூர் - ஏர்வாடி தர்ஹா லைனுக்கு புதிதாய் வந்த நடத்துனர் அனுபவமின்மையாலோ, வாலிப முறுக்கை சிலேடைப் பரப்பில் வெளிப்படுத்தும் முகமாகவோ தர்ஹாவை விடுத்து ஊர்ப்பேரை மட்டும் உரத்து அடுக்குமொழியில் விளிக்க செவிட்டில் விழுந்தது அறை.

சோமுவில் ஏறியாயிற்று. பின் இருக்கை முழுவதும் காலியாய் இருந்தாலும், முதுகெலும்பின் நலன் கருதியும், மழைக்கால தமிழ்நாட்டு சாலைகளில் நம்பிக்கை வைத்தும் நடு இருக்கை ஒன்றைத் தேர்வு செய்தேன். சன்னலோரம்,குழந்தைமையின் விருப்பம். ‘நாம் எந்த இருக்கையில் அமரவேண்டும் என நாமல்ல, நமது நடத்துனரே முடிவு செய்கிறார்’ என்கிற தத்துவ அடிப்படையில், அகவை அறுபது கடந்த பெண்மணிக்காக (கவனிக்கவும், உடன் வந்த பேத்திக்காக அல்ல) இரண்டு இருக்கைகள் முன்னால் இடமாற்றம் செய்யப்பட்டேன். அந்த சன்னலோரத்தின் குழந்தைமை ஏற்கனவே அனுபவப் பாத்தியதையில் இருந்தது. ஒன்றைரை நபர்கள் மட்டுமே அமரக்கூடிய அந்த இருவர் இருக்கையில் கம்பியைப் பிடித்தவாறு ஆள் பாதி கால் மீதியாக அமர்ந்த கணம் ஒரு சபிக்கப்பட்ட சர்க்கஸ் தருணம்.

அருகில் இருந்தவருக்கு சுமார் முப்பந்தைந்து வயது இருக்கலாம். நேர்த்தியாய் உடையணிந்து நெடுநெடுவென்று இருந்தார். பேருந்து கிளம்பியதில் இருந்து என் இடது கையையே பார்த்துக்கொண்டிருந்தார். உற்றுநோக்குகையில் அவரது மையல் என் கைக்கடிகாரத்தின் மீது என்பது தெளிவாயிற்று. மெல்ல என்னிடம் பேச்சுக்கொடுத்தார். அப்போது கடிகாரத்தில் நேரம் சரியாகவும் எனது நேரம் சரியில்லாமலும் இருந்ததை நான் உணரவில்லை. பயணங்களில் நிறைய சுவாரசியமான மனிதர்களை சந்திக்க முடியுமென்பதால் பதிலுக்கு நானும் திருவாய் மலர்ந்தருளினேன்.

‘வாட்ச் நல்லாயிருக்கு. எங்க வாங்கினீங்க?’
‘சிங்கப்பூர்ல’
‘எவ்வளவு சார்?’
‘ம்ம்ம், சிங்கப்பூர்ல 140 டாலர் வந்துச்சு’
‘ஐ ஆம் ...........’ என்றவாறு தனது கார்டை நீட்டினார்.
‘ஐ ஆம் சந்திரசேகர்’ என்றவாறு கையை நீட்டினேன். என்னிடம் லைசன்ஸ் மட்டுமே இருக்கிறது.
‘ஓக்கே சார், இங்க இந்த வாட்ச் கிடைக்குமா?’
‘இதே பிராண்ட் கிடைக்குமான்னு தெரியல. டைட்டன்ல மெட்டல் சீரிஸ் இருக்கு. இதே டைப் வாட்ச்தான் அதுவும். ட்ரை பண்ணிப் பாருங்க’
‘அப்படியா, என்ன ஒரு ஃபைவ் ஹன்ட்ரட் தெளஸண்ட் இருக்குமா?’

500ஐயும் 1000ஐயும் பெருக்கி மலைத்தவனாக உஷாரானேன். இவருடனான எஞ்சிய பயண நேரத்தை எண்ணி பீதியுற்றவனாக பேச்சை மேலும் வளர்க்க விரும்பாமல், ‘தெரியலை, விசாரிச்சு பாருங்க’ என்றவாறு திரும்பி பேகில் வைத்திருந்த உபபாண்டவம் நாவலை வாசிக்க எடுத்தேன். அடுத்த நாற்பத்தைந்து மணித்துளிகளுக்கான துன்பியல் நிகழ்வுகளுக்கும், ஒரு வாரத்திற்கான மனக்குமைவுக்கும் அந்த நொடியும், செயலுமே ஆதுரமாய் இருந்தது.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பது ரசனையாயின் இவர் உரிமையும் உண்டு என்ற கொள்கையாளராய் இருந்தார். கிட்டத்தட்ட என் கையில் இருந்த உபபாண்டவம் பறிக்கப்பட்டது. கையறு நிலையில் பயணத்தின் மன அமைதிக்காக மெளனம் காத்தேன்.

‘நிறைய புக்ஸ் படிப்பீங்களா?’என்றவாறு பதிலுக்குக் காத்திராமல் அந்தப் புத்தகத்தை எடை போடும் தொனியில் உள்ளங்கையில் வைத்துப்பார்த்தார். புத்தகத்தைப் பிரித்து சில பக்கங்களை புரட்டினார். ‘ம்ம்’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினார். அவ்வப்போது தேர்ந்த நில அளைவைக்காரனின் முகபாவங்களை வெளியிடவும் தவறவில்லை. உபபாண்டவம் நாவல் குறித்து அவர் எந்த தர அறிக்கையும் வெளியிட்டுவிடக்கூடாது என்ற அச்சத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையில் இறங்கினேன்.

‘யாரு இந்த ராமகிருஷ்ணன்?’
‘இவரு தமிழில் முக்கியமான எழுத்தாளர்’
‘ஓஹோ, நமக்கு இவரைத் தெரியாதே’ என்றவாறு ‘பேக்ல என்ன? அதுவும் புக்ஸா?’ சனி ஜாதகத்தில் உச்சமாய் இருக்கலாம், நாவில் இருந்தால்... ‘ஆமாம்’ என்றுதான் சொல்லவைக்கும்.
‘எங்க இப்படி கொடுங்க பார்போம்’ இப்போது எஞ்சிய இரண்டு புத்தகங்களும் அவர் கையில். ‘புயலிலே ஒரு தோணி’ - ப.சிங்காரம் ‘நரகத்திலிருந்து ஒரு குரல்’ - சாரு..!

புயலிலே ஒரு தோணியை அவர் புரட்டத்தொடங்குகையில் ஜப்பானிய துருப்புகள் கெர்க் ஸ்ட்ராட் வழியே இந்தோனேஷியாவுக்குள் நுழைந்தபோது ஹாலந்து நாட்டவர் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று ஊகிக்க முடிந்தது. நடுக்கம்! நைசாக ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லி சாருவை கவர்ந்தேன். ஏற்கனவே எஸ்.ரா, ப.சிங்காரம் இருவரும் இவரின் தராசில் இடமின்றி நின்று கொண்டிருக்கையில் சாருவையும் அதில் ஏற்ற விருப்பமில்லை.

அட்டையின் தடிமன், அட்டைப்படம், சிங்காரத்தின் வழுக்கை போன்ற சிலபல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக புத்தகத்தை திரும்ப தந்தார். எனது தலையைச் சுற்றி பறந்து கொண்டிருந்த பறவைகள் கூடடைந்தன. மாசிப்பச்சைக்கு குலதெய்வத்தை தரிசிக்கலாம்.

‘நான் இந்த மாதிரி புக்ஸ்லாம் படிக்கிறதில்லை. பிசினஸ்தான் நமக்கு. அதனால, நெறய தன்னம்பிக்கை புத்தகங்கள், சுயமுன்னேற்ற புக்ஸ் எல்லாம் படிப்பேன். ஒரு லைப்ரரியே வைக்கலாம்...அவ்வளவு புக்ஸ் இருக்கு, ஹா ஹா ஹா’

‘அவ்வளவு புக்ஸ் படிச்சும் தன்னம்பிக்கையோ, முன்னேற்றமோ ஏற்படலீங்களா?’

‘என்ன?’

‘இல்லிங்க, ஏற்பட்டுருந்தா அடுத்த புத்தகம் வாங்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே? அதுக்கு சொன்னேன்’.

லேசான முறைப்புடன் அவர் தலைக்கு மேலே சுட்டிக்காட்டி ‘அந்த பேகை எடுங்க, ஒன்னு காட்றேன்’ என்றார். அங்கே இருந்தது ஹெச்.பி லேப்டாப் கேரிங் கேஸ். ‘அந்த கேரிங் கேஸா’ ‘இல்லிங்க, அந்த ப்ளாக் கலர் லெதர் பேக்’. எனது பொறுமையின் நாணயம் உறைகல்லில் ரத்தம் வர தோய்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.

உள்ளேயிருந்து ‘பணம் சம்பாதிப்பது எப்படி?’ போன்ற தலைப்பைச் சூடிய ஒரு தமிழாக்கத்தை எடுத்தார். மடித்து அடையாளம் வைத்திருந்த பக்கத்தைப் பிரித்து ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அஃது நான் செல்லும் பேருந்தில் பில்கேட்ஸ் ஓட்டுனராகவும், லட்சுமி மிட்டல் நடத்துனராகவும் வந்து கொண்டிருப்பது போன்ற ஜிகினாத்தோற்றங்களை உண்டாக்கிற்று. பிரசங்கம் முடிந்தவுடன் சுவிஷேசக்கூட்டத்தின் பிரச்சாரகர் அனைவரையும் கருணை ததும்பப் பார்ப்பாரே, அப்படி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பேகிற்குள் கையை விட்டார். இம்முறை பில்கேட்ஸின் வங்கிக் கணக்குப் புத்தகம் வந்தாலும் ஆச்சரியப்படக்கூடாது என்கிற உறுதியுடன் இருந்தேன்.


அவர் கையில் இப்போது ‘ப.ச.எ?’ புத்தகத்தின் ஆங்கிலப்பதிப்பு. எனது கண்கள் ஒருமுறை இருண்டு மீண்டன. ‘இது எதுக்கு சார்?’ ‘இல்ல, எனக்கு இங்கிலீஷ் அவ்வளவா தெரியாது. அதனால தமிழ், இங்கிலீஷ் ரெண்டுமே வாங்கிருவேன்.’
‘இங்கிலீஷ் ஒரு மொழிதான சார். உங்களை மாதிரி ஆட்கள் ஈசியா கத்துக்கலாம்’ என்று சொன்னபின்னரே சொல்லியிருக்ககூடாது எனத் தோன்றியது.
‘ஆமா, அதுக்கும் நிறைய புகஸ் வச்சிருக்கேன்... ... ... ... ... ... ... ... ... ... ...’
‘சார், ஒன் செகண்ட். ஏதோ கால் வருது’ என்று தப்பித்து செல்பேசியில் ஆழ்ந்தேன். எப்படிப்பட்ட உரையாடலும் முடிவுக்கு வரவேண்டுமே, வந்தது. உடன் பருந்தெனப் பாய்ந்து பற்றிக்கொண்டார்.

இம்முறை ப்ரம்மாஸ்திரம் ஏவப்பட்டது. ‘நான் புக்ஸ் (புக் அல்ல புக்ஸ்) எழுதிட்ருக்கேன். இன்னும் ஆறு மாசத்துக்குள்ள முடிஞ்சுடும்’
‘ஓ, நைஸ்’
‘ இந்த மாதிரியான பிசினஸ் புக்ஸ்ல இருந்து நிறைய பாய்ண்ட்ஸ் எடுத்து வச்சிருக்கேன். அப்படியே கோர்த்தம்னா ரெண்டு புக் கூடப் போடலாம்.’
‘நல்லாப் போடலாம்’
‘நான் ஆம்வே பிசினஸும் பண்றேன். அது எப்படி பண்றதுன்னா...‘
‘இல்ல சார். வேணாம். நாட் இன்ட்ரஸ்டட்’
‘பரவாயில்ல. ஆமா,சிவகாசில நிறைய பப்ளிஷர்ஸ் இருக்காங்கள்ல?’
‘ஆமா, தெருவுக்குத் தெரு’. பிரிண்டிங் பிரஸ் ஓனருக்கும் பப்ளிஷருக்கும் ஒரே அந்தஸ்தை நல்கும் அவரை எதில் சேர்ப்பது என்றே புரியவில்லை.
‘இப்போ உங்களைப் பார்த்தோன்னே இன்னொண்னும் முடிவு பண்ணிருக்கேன்’
‘என்னன்னு?’
‘இப்போ நீங்க காட்டுன நாவலும் பார்த்தேன். ஒன்னுமே நல்லாயில்லை. பேசாம நானே அந்த மாதிரி நாவல் எழுதலாம்னு ... ... ....’அடுத்தடுத்த வார்த்தைகள் கேட்கவில்லை. உலகமே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது. ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கல் ஆற்றுவது இனியும் சாத்தியமில்லை எனத்தோன்றியபோது திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்துவிட்டது. திரும்பிப் பார்த்தேன். கடைசி இருக்கை காலியாய் இருந்தது. தெறித்து ஓடிப் போய் அமர்ந்துகொண்டேன். வாந்தி எடுப்பதுபோன்ற பாவனைகளுடன் குனிந்தவன் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. அது மாட்டுத்தாவணிக்குள் வண்டி நுழையுமுன் வேகத்தடையிலேயே இறங்கித் தப்பியது வரை தொடர்ந்தது.

ஏர்போர்ட் சென்று அண்ணனை வழியனுப்பிவிட்டு ஒன்பது மணிக்கே மாட்டுத்தாவணி வந்துவிட்டிருந்தாலும் நண்பன் அழகுராசாவுக்காக காத்திருந்து அழுது புலம்பிவிட்டு, அவரது விசிட்டிங் கார்டை சுக்கல் சுக்கலாய் கிழித்தெறிந்து தலையை சிலுப்பிக்கொண்டு சொன்னது இது ,” நாமளும் சீக்கிரம் நாவல் எழுதணும்டா”



Read more...

இங்கே ஒரு காதல் கதை 6

>> Monday, December 13, 2010




“எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடியும்” என்கிற தாயுமானவரின் தத்துவத்தில் இன்றைய விடியல் நிலை கொண்டது. நேற்றைய மதுவின் போதை நிகழ்வை ஒத்திவைக்கவில்லை. குரூரமான இரவும்... நீட்சியாய் விடியலும். உண்மையான அன்பு என்றோ ஆத்மாவின் தேடல் என்றோ ‘காதல்’ என்கிற சுயநலத்தை ஒருபோதும் வகைப்படுத்த முனைந்ததில்லை. ஆனால் நீ என்கிற போது மட்டும் புலன்களின்/ அறிவின் கட்டுப்பாடுகள் மயன் நிர்ணயித்த நகரின் பழியெனப் பற்றி எரிகிறது.

நிரந்தரமான கூடு என்றோ அல்லது உண்மையான காதல் என்றோ நான் கூறிக்கொண்டலைவது எனது தோற்றமாயையாய்தான் இருக்கமுடியும். நிரப்பப்படாத இடைவெளி, எதுகொண்டும் சமனாகாத மனதின் வெற்றிடம், இன்னொருத்தனை/ஒருத்தியை தீண்டாத உதடுகள் போன்றவை இப்பேரண்டத்தின் பிரம்மாண்டத்தின் முன்பு போலிப்பிம்பங்கள் அன்றி வேறில்லை.

என்றாலும் சகி, நீளும் கடைத்தெருக்களில் உனது பிரிய விரல் கோர்த்தல்களையும், வெம்முலைகளின் நடுவேயான பனிக்காலத் திளைத்தல்களையும்,இதழ்களினூடாக மேல்தாடையினுள்ளோடித் துழாவும் நாவின் குழைவுத் தீண்டல்களையும், உனக்கேயான கீழ் உதட்டின் சிவப்பையும், அகன்ற நிம்மதியின் ஆலென வீற்றிருக்கும் உன் மடியினையும், கருணையின் யோனியையும் இழந்து நிற்கும் இந்த நாள் நரகமாய் இருக்கிறது. நீ காட்டிச்சென்ற பேரன்பின் நாட்களை ஜனித்த குழந்தையின் நேசத்தோடும், முலைப்பால் பற்றோடும், நன்றியோடும் நினைவு கூர்கிறேன்.

தீர்மானங்களின் நிழலில் வாழும் பூஞ்சையை விருட்சமென கற்பனை செய்துகொள்வது எனது கற்பிதமாய்தான் இருக்க முடியும்...எனினும், எஞ்சிய நாட்களுக்கான புன்னகையை, வன்மத்தை, கிளர்வுகளை, கொடுந்தனிமையை, காதலைத் தந்தவாறு வற்றாத ஜீவநதியென எனக்குள் ஓடிக்கொண்டே இருப்பாய்.

கிரியா ஊக்கிகளால் மாற்றவியலாத நம் வாழ்வின் சமன்பாட்டில், நாம் ஒருபோதும் சந்தித்து விடாதிருக்கவும், அவரவர்க்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழவும் எல்லாம் வல்ல இயற்கை ஆசிர்வதிக்கட்டும். அழகே! என்றென்றும் என் காதல் உனக்கு!



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP