ப்ரெட்ஆம்லெட்

>> Thursday, June 25, 2015




கடந்த ஒரு வாரமாகவே உடல் நலக்குறைவு.வெயில், அலைச்சல், சளி.காய்ச்சல்.மீண்டும்அலைச்சல்மீண்டும் நேற்றிலிருந்து காய்ச்சல்.அரிசி உணவு எதுவும் உட்கொள்ளவில்லை. பேரீச்சைச்சாறுகலந்தபால், கருப்புதேநீர், ப்ரெட், ரஸ்க், மாரிரொட்டி என்று உயிர் வாழ்ந்தேன். இனியும் தாங்காது என்றாகிவிட்டது.
இன்று மதிய உணவாக ப்ரெட்ஆம்லெட் என்கிற அந்தியந்த தோழனை செய்து சாப்பிட்ட திருப்தியோடு டைப்புகிறேன். கடைசியாக ப்ரெட்ஆம்லெட் சாப்பிட்டது எப்போது என்று யோசித்தேன். இந்நாள்முதல்வர்அவர்கள், நீதியரசர் குன்காவின் தீர்ப்பால் பதவி இழந்த அன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. எப்போதாவது வேலை செய்யும் மூளை அன்று முன்கூட்டியே வேலை செய்தது ‘சரக்கெல்லாம் வாங்கிச் சேர்த்தாய். அந்தோ! தோசை மாவு தீர்ந்துவிட்டால் என் செய்வாயடா செல்வமே, என் செய்வாய்?’ எனக்கேட்டது.
உடனடியாக இரண்டு பாக்கெட் ப்ரெட்டும், டஸன் முட்டைகளும் வாங்கி இல்லம் சேர்ந்தேன். அடுத்த ஐந்து வேளை உணவும் ப்ரெட்ஆம்லெட்தான் .ஐந்து வேளை இல்லை ஐந்து நாட்கள் கூட ப்ரெட்ஆம்லெட் சாப்பிட நான் தயார்.தொண்டி, மதுரை, சென்னை, இராமேஸ்வரம், கோவா, சிங்கப்பூர் என்று பரந்துபட்ட நிலப்பரப்பில் என்னைக் காத்த உணவு இது.
தொண்டியில் ஆராய்ச்சி மாணவனாய் இருக்கையில் அறையில் பிரதிமாதம் 15ஆம் தேதி தொடங்கும் தட்டுப்பாடு. பெட்ரோல், தேநீர், சிகரெட், அயர்ன்செய்தஉடைகள், ஃபெர்ப்யூம், சவரம், உணவுஎனஅனைத்தும்ரேஷன்தான்.காலை- இரவு இரண்டு துண்டு ப்ரெட் + ஒரு முட்டை சேர்த்த ப்ரெட்ஆம்லெட். வயிறு நிறையாது. நைனா டீக்கடை போய் அக்கவுண்டில் டீ குடித்து வருவோம். 25 தேதிக்கு மேல் நிலைமை இன்னும் மோசமாகும். புகைத்து முடித்த ஃபில்டர் சிகெரெட்டுகளின் ஃபில்டர்களை மட்டும் ஒரு தட்டில் பத்திரமாய் பாதுகாத்திருப்பார்கள். அன்று மாலை பொது நிதியில் இருந்து காசு திரட்டி ப்ளைன் சிகரெட் வாங்கப்படும். அணுஉலைக்குள் யுரேனியக் குச்சியை நுழைக்கும்லாவகத்தோடும், எச்சரிக்கையோடும் ஒவ்வொரு ப்ளைன் சிகெரெட்டுக்கும் ஃபில்டர் பொருத்தப்படும். அந்த ஃபில்டரும் நைந்து, புகைந்து, நெஞ்சு காறிய பின்னர் பீடி அமலுக்கு வரும். 1ஆம் தேதிபிறக்கும் – பிறகென்ன?! இட்லிதான், பூரிதான், வசந்தம் ஹோட்டல் சாப்பாடுதான், பீர்தான், ராஜிவ்காந்தி புரோட்டாக் கடை சால்னாதான், கலக்கிதான்!
நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து இருக்கும் அறைகளின் குறுக்குவெட்டுத்தோற்றம்தான் இது. நம்மில் பெரும்பான்மையானோர் கடந்து வந்ததும் கூட. ஆனால் சென்னை, கோவா போன்ற பெருநகரங்கள் வேறுமாதிரியான வரவேற்பையும், வாழ்வியல் நெருக்கடியையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். முதல் நாளே விரையில் உதை வாங்கிய வலிதான். வாங்கிக்கொண்டிருந்த இடைப்பட்ட சம்பளத்தில் கேண்டீன் இல்லாத நாட்களில் இரண்டு / ஒரு வேளை உணவு என ஓட்டிக் கொண்டிருந்த நேரம்.
முதுகுளத்தூரிலிருந்து சென்னையில் அபாட்ர்மெண்ட் கட்ட இடம் பார்க்க வந்த கல்லூரித் தோழன் என்னை சந்திக்க அவன் காதலியுடன் மதிய நேரத்தில் வந்தான். மாதக்கடைசியானதால் நான் படோபடமாய் எதுவும் செய்யவியலவில்லை. இரவுணவுக்கு வைத்திருந்ததையும் சேர்த்து இருவரையும் ப்ரெட்ஆம்லெட், தேநீர் என்று உபசரித்தேன். கிளம்பும்போது ‘அப்புறம்மாப்ள, டின்னருக்கு எங்ககூட சேர்ந்து சாப்பிடலாம் வாடா’ என்றான் .நான் நாசூக்காக மறுத்தேன். அவன் காதலி சிரித்துக் கொண்டே ‘அண்ணே, முட்டையும் பாலும் வைச்சிருக்காங்க. அதைதான் சாப்பிடுவாங்க. இல்லண்ணே?’ என்றாள். அவனும்’ வேண்னா பாரு மாப்ள, இப்படி முட்டையும் பாலும் தின்னே நீ ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் பாம்பா மாறிடப் போற’ என்றவாறு பலமாக சிரித்தான். நானும் சிரித்தேன். அது கல்லூரி நட்புக்கே உரிய யதார்த்தமான கமெண்ட் என்றாலும் காயப்பட்டேன். ஆயினும், பெரிதாய் சுயபச்சாதாபமெல்லாம் கொள்ளவில்லை. ஆனால் எப்போது முட்டையையும் பாலையும் ஒன்றாய் பார்க்க நேர்ந்தாலும் நான் இச்சாதாரி பாம்பாக மாறி ‘நீயா’ படத்தின் புகழ் பெற்ற ‘ஒரேஜீவன்ஒன்றேஉள்ளம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவது போன்ற கற்பனை துரத்துகிறது. கற்பனையிலும் “ஸோலாடான்ஸ்’தான் என்பது காவியசோகம்.
பள்ளிக்கரணையில் நான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு சற்று தள்ளி ஒரு மல்லு டீ & ஸ்நாக்ஸ் கடையும், டாஸ்மாக்கும் உண்டு. நான் மல்லுகடைக்கு நண்பர்களுடன் சென்றாலும் எதுவும்சாப்பிடுவதில்லை .இதே கட்டன் சாயாவும், ப்ரெட் ஆமலெட்டும்தான் ரூமிலும் தின்னப்போகிறேன் என்பதுதான் காரணம்.ஜேக்கப் என்பவர் அக்கடையை நடத்தினார். எப்போது அவர் என்னிடம் ஆர்டர் கேட்டாலும் சிறு புன்னகையுடன் மறுத்து அருகிலிருக்கும் நண்பனிடம் ஆர்டர் எடுக்கச் சொல்வேன். சான்ஸிலர் சிகரெட்மட்டுமே புகைக்கும் ஜேக்கப்பும் புன்னகையுடன் கடந்துவிடுவார்.
எனது முன்னால் காதலியுடன் கிட்டத்தட்ட அனைத்து உணர்வுகளும் பிளவுற்றிருந்த நேரம். ஒரு நாள் மாலை அவளைச் சந்திப்பதற்காக போரூருக்கு, வண்டிக்கு பெட்ரோல் போடக் கூடக் காசில்லாமல் பஸ்சில் சென்றேன். காதலின் கடைசி இரைஞ்சல். வேறென்ன சொல்ல?அன்றுதான் அங்கே டோமினோஸ் பிட்ஸா திறந்திருந்தார்கள். மணி இரவு 7ஐ நெருங்கியிருக்கும். வீட்டில்தான் இருந்தாள்.
‘உள்ளேவாங்க’
‘ஸாரி டு டிஸ்டர்ப் யு’ அவமானப்படும் அல்லது படப்போகும் தருணங்களில் மொழியை மாற்றிக் கொள்வதுதான் வசதி.
‘பரவாயில்ல வாங்க’ சற்று நேரம் மெளனம்.
பிறகு நானே ‘நீ இந்த ப்ரேக் அப் பத்தி கொஞ்சம் யோசிக்கலாம்ல’
‘நத்திங் டூயிங். சும்மா பேசிப்பேசி நீங்களும் டென்ஷனாகி என்னையும் டென்ஷன் பண்றீங்க’
இத்யாதி இத்யாதி பேச்சுகள்.தொடர் புறக்கணிப்புகள், அவமானங்கள்.அனைத்து கடவுளர்களாலும் கைவிடப்பட்டதாய் உணர்ந்தேன்.பின்னாளில்,
“நிசப்தம்மேவியகடல்
கவிழ்ந்தேமிதக்கும்படகு”
என்று இத்தருணத்தைப் பதிந்து வைத்தேன்.
இவ்வளவு உரையாடல்களுக்கு நடுவிலும் டொமினோஸ் பீட்ஸா பார்சல் ஒன்றைப் பிரித்தாள்.‘சே, சில்லி ஃப்ளேக்ஸ் எக்ஸ்ட்ரா சொன்னேன். இப்டியா அரைகுறையா பேக் பண்ணுவாங்க’ என்று சலித்துக் கொண்டாள். உணவின் மணம் வந்ததும் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த என் வயிறு இயற்கையான தூண்டுதலால் அமிலம் கலந்த திரவத்தை தொண்டை வரைக்கும் அனுப்பி கசப்பால் நிறைத்தது. பாதியில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ரிமோட் தேடி நியூஸ் சானல் ஒன்றிற்கு தாவியவள் என்னைப் பார்க்காமலேயே ‘சாப்ட்டாச்சா?’ என்றாள். அதுஒருபதில்தேவைப்படாதகேள்வி.
உடலெங்கும் கொதிக்க தொடங்கிய கசப்புடன் நான் அங்கிருந்து கிளம்பி என் கூட்டிற்கு வந்தேன். அருகில் இருந்த டாஸ்மாக் வாசலில் ஒரு கணம் தயங்கி நின்றேன். நிதிநிலையை உத்தேசித்து ரூமுக்கு நடக்கத் துவங்குகையில், எங்கள் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் பரணிஅவசரமாய் கடைக்குள் நுழையப்போனார். என்னைப் பார்த்துவிட்டு, ‘தம்பி, என்னஇங்க?’ என்றார். ‘இல்ல சும்மாதான். பார்ப்போம்’. பரணி அருகாமை வீட்டுக்காரர் மட்டுமல்ல அவரின் சொந்த ஊரும் என் ஊருக்குப் பக்கம்தான். ஆதலால் கடன் கேட்க கூச்சமாய் வேறு இருந்தது. விலகினாலும் அவர் விடுவதாயில்லை.‘அடச் சும்மாவாங்க. நான் இருக்கேன்ல’ என்றவாறு உள்ளே அழைத்துப் போனார்.
உள்ளே சென்றதும் சப்ளையரை அழைத்தார். பள்ளியில் மனப்பாடப் பகுதி ஒப்புவிப்பது போல ’ஓல்ட் மாங்க் கோட்டர், ஒரு கப்பு, ஒரு கோக்கு, ஒரு வாட்டர் பாக்கெட்டு, அவிச்ச முட்டை ஒன்னு மொளகு போட்டு’ சப்ளையர் இளைஞன் என்னைப் பார்த்தான். நான் தர்மசங்கடமாய் அவரைப் பார்த்தேன்.‘அட, சாப்பிடுங்கன்னு சொல்லி நான்ல கையைப்பிடிச்சு இழுத்தாந்தேன். சப்ளையர் தம்பி இந்தா ஐநூறு ரூபா.மேக்கோண்டு சில்லறை எதும் இங்க வரவேணாம். அவரு கேக்குற ஐட்டம்லாம் டாண் டாண்ணு வந்துரணும்’ என்றார் .நான் மேஜிக் மொமென்ட்ஸ் வோட்கா க்வார்ட்டர் சொல்லிவிட்டு இலக்கின்றி வெறித்தேன். அவரும் எதுவும் கேட்கவில்லை. எந்த நியமங்களும் இன்றி குடிக்கத் தொடங்கினோம். சற்று நேரத்தில் சிரித்தபடியே ‘கோட்டர்தான் என் கோட்டா. கணக்கெல்லாம் கொடுத்தாச்சு, நீங்க வேணும்ன்றத வாங்கி நல்லா சாப்ட்டு வாங்கதம்பி’ என்று கிளம்பியவர் சட்டென்று திரும்பி ‘தப்பாஎடுத்துக்காதீங்க. தனியா குடிக்கிறது ரொம்ப ஆபத்தான காரியம். பொதசேறு.பார்த்துக்குங்க’ சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
நான் அடுத்த க்வார்ட்டர் சொல்லிவிட்டு காறித் துப்பியவாறே இருந்தேன். திரண்டிருக்கும் மொத்தக் கசப்பையும் வாந்தி எடுக்க முயலும் கற்பனை. குடித்து முடித்து சற்றே தள்ளாட்டத்துடன் எழுந்தவன் ஜேக்கப் கடைக்குதான் சென்றேன். கடை எடுத்து வைக்கும் நேரத்தில் அவர் என்னை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது.
சான்ஸிலர் புகையும் வாயுடனும், நாசியுடனும் ஒரு விநாடி என்னை தீர்க்கமாகப் பார்த்தார். ஊடுறுவும் பார்வை. நான் தலையை திருப்பிக் கொண்டேன். என்ன நினைத்தாரோ, அவரே எதிரில் இருக்கும் மெஸ்ஸுக்குச் சென்று ஒரு தட்டு நிறைய சோறும் மீன் குழம்பும் வாங்கிக் கொண்டு வந்து வைத்தார். பின் ‘ஒருடபுள்ஆம்லட்.ஸார்டேபிளுக்கு’ என உள்நோக்கி குரல் கொடுத்தார். அதற்கு பிறகு வந்த நாட்களில் ஜேக்கப் கடையில் கட்டன் சாயா, ப்ரெட் ஆம்லேட் சாப்பிட்டிருக்கிறேன். அவர் பையனை பைக்கில் ஏற்றிக் கொண்டு அலைந்திருக்கிறேன். கல்லா கட்டி, கடை பாத்திரங்களைக் கழுவும் வரை அரட்டை அடித்திருக்கிறேன். அவர் வழக்கம் போல சிரித்துக் கொண்டுதானிருந்தார். ஆனாலும் அந்தப் பின்னிரவில் நான் கண்ட - நிகோடின் மண்டலத்துக்கு நடுவிலிருந்து கருணையின் புன்னகையை மட்டுமே சூட்டியிருந்த ஜேக்கப்பின் கருப்பு உதடுகளை சித்திரமாகவே என் நினைவில் மீட்டெடுக்க முடிகிறது.



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP