கவிதையை செய்தல்

>> Sunday, September 14, 2008


எழுதிவிடமுடியா ஒரு கவிதையென

நீ வார்க்கப்பட்டிருக்கிறாய்.

இருப்பதில் பெரும் சொற்களஞ்சியமென

அறியப்படுவதன் துணைகொண்டு

உனை வாசிக்க முயல்கிறேன்

துகள்களாய் சிதற்வுறுகிறதுன் உடல்

எதனுள்ளும் சிக்காமல்

நழுவத்தொடங்குகின்றன சொற்கள்

பத்திகளாய்

வாக்கியங்களாய்

வார்த்தைகளாய்

எழுத்துகளாய்

………….

வெறுமை சூல்கொண்ட கணத்தில்

எழுதத்தொடங்கினேன்

முற்றுப்புள்ளியிலா பெருங்காப்பியத்தை

ஒரே கவிதையென தலைப்பிட்டு.



தனிப்பறவை




தெளிவானதொரு பிரக்ஞையற்ற
சூழலில் இந்த அறையிருக்கிறது
அறைக்குள் நான் வசிக்கிறேன்
சிந்தனை, சுய எள்ளல்,
நினைவு தப்புதல், நீளும் பகல் தனிமைகள்,
சுயமைதுனம், போதை-
பெருகும் ஆற்றாமைகளின் பட்டியல்

அறைக்கு வெளியே இருப்பவர்கள்
குறித்து எதுவும் எனக்கு தெரியாது
இரவைக் கடக்க தேவை எட்டு மணி நேர மரணம்.



மற்றுமொரு நாள்...


எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை
இதமான முத்தங்கள்
வழக்கமான சூரியன்
சிரிக்கும் மாணவர்கள்
நசநசக்கும் நெரிசல்
டேர் டு டச் டி-சர்ட்டுகள்
நெருக்கமான சிநேகிதம்
டிக்கட் கொடுக்கும் மெத்தென்ற விரல்கள்
குருட்டு பிச்சைக்காரனின் ஓடும் மேகங்களே
சிதைந்து கிடக்கும் நாயின் உடல்
தொட்டியில் பால்சம் பூக்கள்
காரிடார் போன்சாய்கள்
கஃப்டேரியா வாஸ் அப்-கள்…
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
அழகான எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை.



About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP