அஸ்டக் போராளியுடனான சந்திப்பு

>> Tuesday, March 26, 2013



A: உங்க பேரே # டேக் தானா?
#: இது ஒரு சமூகவிணையரசியலியக்கப்பொருள்முதல்வாதமதசாதியெதிர்ப்புவிழிப்புணர்வுப் புரட்சிப் போராளிகளோட அடையாளம். எங்களால #சமூக மாற்றங்களை #லேப்டாப் #இணையம் மூலமா கொண்டு வந்துட முடியும்னு தீவிரமா நம்புறோம்
A: (தலையை சிலுப்பி தெளிவாகிக் கொள்கிறார்) பேசுறப்போ கூட # போட்டுதான் பேசுவீங்களா?
#:ஆமா. அது எங்க #குறியீடு. அதை நாங்க #நிறுவிதான் ஆகணும்
A: என்ன மாதிரியான போராட்டங்களை நீங்க முன்னெடுக்குறீங்க?
#: பலவகையான போராட்டங்கள், புரட்சிக் களங்கள். #தெருமுக்கு டீக்கடையில் இருந்து, #அமெரிக்க வெள்ளை மாளிகை வரைக்கும் நாங்க மாற்றத்தைக் கொண்டுவந்துருவோம்.
A: சிரிக்காமப் பேசுறீங்களே? சரி, குழுவா இயங்குறீங்களா?
#: ஆமா. #ஃபேஸ் புக், #ட்விட்டர், #ப்ளாக்னு நாங்க இறங்கி அடிக்காத களமே இல்லை. எங்களை அப்போதான் Hash Tag போராளிகள்னு சொன்னாங்க. இந்த Hash Tag – பிற்காலத்தில Aztec னு மருவிடுச்சு. இப்போ எங்களை அஸ்டக் பழங்குடியோட வழித்தோன்றல்கள்னு அடையாளப் படுத்திக்குறோம்.
A: லேசா கண்ணைக் கட்டுதே. பொதுமக்கள்கிட்ட நீங்க போய் சேர்ந்துட்டிங்களா?
#:அப்படி எங்களை சிம்பிளா ஒதுக்கிட முடியாது. #பின்நவீன எழுத்தாளர்களில் இருந்து முன்கற்கால படைப்பாளிகள், தொழில் நிறுவனங்கள் / அதிபர்கள், சமகால அரசியல்வாதிகள்னு – அஸ்டக் போராளிகளைப் பார்த்து நடுங்காத வர்க்கமே இல்லை. #பாஸ்டன் டீ பார்ட்டி, #பிரெஞ்சுப் புரட்சி, #குஞ்சு புரட்சி(பறவைக் காய்ச்சலின்போது கேரளாவுக்கு எதிராக நாமக்கல் ப்ரெளசிங் சென்டரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மூத்த அஸ்டக் போராளியால் முன்னெடுக்கப்பட்டது), மல்லிகை, அந்திமந்தாரைன்னு பல நூற்றாண்டுகளா நாங்க #வரலாற்றில் பதிவாகிருக்கோம்.
A: தமிழ்நாட்டுல நீங்க என்ன செய்றீங்க?
#: எல்லாமே செய்றோம். #ஈழம் தொடங்கி திருவாரூர் தீயசக்தி கருணா, மாண்புமிகு அம்மா, வால்மார்ட், சாதிமறுப்பு / ஏற்பு, கூடங்குளம், காவேரின்னு இது முடிவில்லாத # போர்க்களம். ஆஃபிஸ்ல இருந்தோ, ஆண்ட்ராய்டு ஃபோன்ல இருந்தோ எங்க அஸ்டக் போராளிகள் பொதுவெளில கருத்தை # போட்டு சொல்லிட்டே இருப்பாங்க
A: உங்களால எதாவது மாற்றங்கள் ஏற்பட்ருக்கா?
#: களப்பணில #ரிசல்ட் பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. தொடர்ந்து இயங்கி இந்த #தமிழ் சமூகத்தை மானமும், அறிவும் உள்ளதா மாத்திடுவோம்
A: அய்யா பெரியாரோட கருத்தை எல்லாம் பேசறீங்களே? அரசியல் ஈடுபாடு உண்டா?
#:நாம வாங்குற ஒவ்வொரு லைக்கிலும், ஒவ்வொரு ஷேரிலும் அரசியல் இருக்குன்னு அஸ்டக் போராளிகள் நம்புறாங்க
A: (ஜெர்க் ஆகி… கிழிஞ்சது போ! லைக், ஷேரா…) சரிங்க, கிளம்புறேன்.
#:இந்த #போஸ்டை எப்போ போடுவீங்கன்னு சொல்லுங்க, அனைத்துலக அஸ்டக் போராளிகளோட மைய இணையப் பக்கத்தில ஷேர் செய்ய சொல்லணும்.
A - ஓடித் தப்பிப்பதா, இல்லை யாரையும் உதவிக்குக் கூப்பிடலாமா என்கிற யோசனையோடு வாசலைப் பார்க்கிறார்.
#: நம்ம போராளிகளை அனுப்பி லைக்கும் போட சொல்றேன்
A - மயங்கிச் சரிகிறார்



Read more...

K - A - D - A - L, கடலா? காதலா?

>> Wednesday, February 13, 2013




‘அப்புறம், புலிய அங்க வச்சுப் பார்த்தேன்’
‘எங்கடே?’
‘கடல்’ கொட்டாயிலதாம்லே’
‘ஆமடே, பொளுதே போவல, சவமாயிட்டு திண்ணைல சாஞ்சுருக்கதுக்கு கொட்டாய்க்குப் போறது பெட்டராயிட்டு கேட்டியா?’
‘படம் எப்படி மக்கா?’
‘லே, சூப்பருல்லா! எங்க ஆச்சிய கொட்டாய்ல தரிசுச்சேம்ல! வேதக்கோயிலுல்ல என்னலா சொல்லுதான்? நீ விரியன் குட்டியா இல்ல, விசுவாசியா? அதையேதான் திருப்பி வாசிக்கானுவ. மன்னிக்குறதுக்கு மனசு மட்டும் போதாதுலே, ஒரு வீரம் வேணும் கேட்டியா?’
‘சண்டியர்ல கமலகாசன் சொல்றமாதிரியாடே?’
‘லே, இது வேறவே, படத்தப் பாரு, அப்புறம் சொல்லு, ஒனக்குப் புடிக்காட்டி காந்திமதிகிட்ட போய் தலய கொடுக்கேன்’
‘ஓந்தலய வச்சு நாங்க என்ன மயிரா புடுங்க? விசயத்துக்கு வால்லே. அந்த ஹீரோயினுப் பொண்ணு ‘தளுக் தளுக்’னு தளும்புறாளே, ஆஃப்பாயில் மஞ்சக்கரு கணக்கா!’
‘யேய், செத்த மூதி! என்னிக்காச்சும் ஆர்யாசுல பஃபே சாப்பிட்ருக்கியாலே?’
‘இல்லியே மக்கா’
‘ம்க்கும், வாயப் புடுங்காமா சொல்றதக் கேளுலே, ஒனக்கு ஐஸ்க்ரீம் புடிக்குந்தான?
‘என்னடே. அனந்தசயனம் ஸார்வாள்ட்டருந்து ரெண்டு பேரும் ஒன்னா படிக்கோம், பொறங்கைல வழிஞ்சாலும் நக்கித் திம்பேன்னு தெரியாதா ஒனக்கு?’
‘தாயளி, நீ நக்கலைனா நான் நக்கப் போறேன், அது இல்லடே விசயம். ஒரு கரண்டி வக்கிற கப்புல, ரெண்டு கரண்டி வச்சா திம்பியா மாட்டியாம்லே?’
‘நல்லா வளிச்சு திம்பேன்’
‘அதாம்லே தொளசி, ராதாக்கா மகளாக்கும்’
‘ஓ, இப்போ வெளங்கிட்டு மக்கா! அது சரி, பாட்டையா(Bharathi Mani) நடிச்சுருக்காராமே?’
‘ஆமாம்லே, அவரு சும்மா வந்து போனாலே கவருமெண்டு கொண்டு வந்து அவார்டா கொட்டுவாம்லே! இதுல எண்ணி பத்து வார்த்தை வேற பேசுதாரு, எளுதி வச்சுக்கோ, வார வருசத்துல அறுவடையே இந்தப் படத்துக்குதாம்லே!’
‘அப்போ கார்த்தி மவன்?’
‘லே, கோட்டியாம்ல புடிச்சுருக்கு ஒனக்கு? கார்த்திக்கு இப்பதாம்லே கல்யாணமாயி அவுரு அலெக்சு மாரி பொட்டி தொளைக்கிற படமா கொடுக்காரு..?!’
‘அவனில்லலே, எப்பவுமே பால் கட்டுன மாரி நெஞ்ச விம்மிக்கிட்டே வருவாருல்லா நடிகரு முத்துராமன், அவுரு மவன் கார்த்தி, கார்த்தி மவன்..’
‘அவனச் சொல்லுதியா! கெளதமு! ஹீரோவாக்கும். ஆளு வாட்டசாட்டமாய் இருக்கான். கொஞ்சம் நடிக்கவும் செய்யுதான், ஒரு மாரி கொள்ளாம் கேட்டியா’
‘அப்ப, கொட்டாய்க்குப் போய் இந்தப் படத்த பாக்கலாந்தானே?’
‘நல்லாடே, போய்ப் பாரு. ஆனா ஒரு விசயம் மக்கா! தாந்தேன்னு ஒருத்தனோட சிறுத்தய வாசல்ல கட்டி வச்சிருப்பாம்லே, அதுல ஏறி ஒக்காந்து படம் பாக்கப் போனே, தாயளி நீ தீந்தேம்ல. ஒளுங்கா கொட்டாய்ல போட்ருக்க சேர்ல ஒக்காந்து பாரு’



Read more...

நவீன எழுத்தாளர் மசாலாப் படம் பார்க்கிறார்

>> Friday, January 18, 2013


இச்சூழல் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதுதான்.
எப்படியும் வருடமொருமுறை வாய்த்து விடுகிறது
தனது ஆகப்பழைய விமர்சனத்திற்கு
புதிய விவாதங்களை எழுப்பிய
இயக்குனரின் புத்தம்புதிய படம்.
வழக்கமான இருக்கையை விடுத்து சற்று மாறி அமர்ந்தாலும்
படம் பற்றிய கோணம் மாறிவிடும் ஆபத்திருப்பதால்
தமிழ்ச்சூழலின் இயங்குவெளியை சபித்தவாறே
இருளிலும் கவனித்து அமர்கிறார்.
திரையில் காட்சிகள் நகர்கின்றன
படம் லண்டனில் எடுக்கப்பட்டிருந்தாலும்
காட்சிகள் பார்சன் காம்ப்ளெக்சிலேயே எடுக்கப்பட்டிருப்பது
பத்து நிமிடங்களில் தெரிந்து
சத்தமாகவே விசிலடிக்கிறார்
ஒரு மசாலாப் படத்திற்கு வரநேர்ந்த துக்கவிசாரத்துடன்
காட்டமான மொழியில் குறிப்பேட்டில் பென்சிலை நகர்த்துகிறார்
அவ்வப்போது ஃபெலினியையும், கோடார்ட்டையும்
மழுங்கிய பென்சிலால் கோடி காட்டுகிறார்
அராமிக் மொழியில் வெளிவராத படமொன்றை
மசாலா இயக்குனருக்கு பரிந்துரைக்கவும் தவறவில்லை
சிறுநீர் இடைவேளைக்கு சற்று முன்னர்
முழு விமர்சனத்தையும் தயாரித்துவிட்டு
எதிர் இருக்கையில் கால்வைத்து
கிங்ஸ் பிடித்தவாறே
திரைக்குள் ஆழ்கிறார்.
அவ்வப்போது செல்பேசி
இருள் மூலைகளை வெறித்து
மீதி நேரம் கடத்தி வெளிவருகையில்
தனது மகனுக்கும் மகளுக்குமாக
மாலைக் காட்சிக்கான டிக்கட்களை
மறக்காமல் வாங்கிக் கொள்கிறார்.



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP