கவிதையை செய்தல்
>> Sunday, September 14, 2008
Read more...
தெளிவானதொரு பிரக்ஞையற்ற
சூழலில் இந்த அறையிருக்கிறது
அறைக்குள் நான் வசிக்கிறேன்
சிந்தனை, சுய எள்ளல்,
நினைவு தப்புதல், நீளும் பகல் தனிமைகள்,
சுயமைதுனம், போதை-
பெருகும் ஆற்றாமைகளின் பட்டியல்
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை
இதமான முத்தங்கள்
வழக்கமான சூரியன்
சிரிக்கும் மாணவர்கள்
நசநசக்கும் நெரிசல்
டேர் டு டச் டி-சர்ட்டுகள்
நெருக்கமான சிநேகிதம்
டிக்கட் கொடுக்கும் மெத்தென்ற விரல்கள்
குருட்டு பிச்சைக்காரனின் ஓடும் மேகங்களே
சிதைந்து கிடக்கும் நாயின் உடல்
தொட்டியில் பால்சம் பூக்கள்
காரிடார் போன்சாய்கள்
கஃப்டேரியா வாஸ் அப்-கள்…
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
அழகான எதிர்வீட்டுக் குழந்தையை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை.
'ப்ளீஸ் நாம அப்புறமா பேசித்தீர்த்துக்கலாம். ஞாயித்துக்கிழம முடிய இன்னும் 10 மணி நேரம் இருக்கு.'
தொடரும்
Biological weapon- chasing, சப்பையான ஒரு வரிக்கதை, இதுக்கு இந்த பில்டப் அப்படிங்கற ரேஞ்சுல ஒரு fwd மெயில் வந்துச்சு, உங்கள்ள சில பேருக்கும் வந்திருக்கலாம். அந்த நண்பர்கிட்ட நான் கேட்கறது life is beautiful அப்படின்னு ஒரு படம்...செகண்ட் வேர்ல்ட் வார் டைம்ல ஒரு யூதக்குடும்பம் ஜெர்மன் சிறைக்கூடத்துல படற அவஸ்தைகள், ப்பூ இது ஒரு கதையா? அப்படின்னு சிம்பிளா மெயில் அனுப்புவீங்களா? சைக்கிள தொலச்சுட்டு வேலவெட்டி இல்லாம ஊரெல்லாம் தேடுறான்யா, bicycle thiefனு இத ஒரு படமா வேற எடுத்திருக்கானுங்கன்னு பேசுவீங்களா? ஏன் ஒரு தமிழன் உலக சந்தைக்கான ஒரு படத்தைக் கொடுத்ததுக்கு இப்படி கொலவெறி காட்றீங்க? (மேற்கூறிய இரண்டு படங்களையும் நான் தசாவதரத்தோடு ஒப்பீடு செய்யவில்லை,நான் கூற விழைவது அனைத்து திரைப்படங்களுக்கும் ‘one line story’ என்கிற ஒன்று உண்டு என்றுதான்)
ஒரு பதிவர் தன்னோட பதிவுல, ரங்கராஜ நம்பி ‘ஓம் நமோ நாராயணாய’ என்று கத்தும்போது Brave heart படத்துல Mel Gibson சுதந்திரம் அப்படின்னு கத்துறத ஞாபகப்படுத்துனதா எழுதிருக்காரு. அதனால இப்ப என்ன? கமல் அப்படி சொல்லக்கூடாதா? ஸ்காட்டிஷ் விடுதலை வீரனுக்கும் பிரிட்டிஷ் இராணுவத்துத்துக்கும் நடக்குற போராட்டத்துல கத்துனா மட்டுமில்ல, சைவ வைணவ போராட்டத்துல காட்டுனாலும் அது வீரம்தான், நண்பர்களே, அடக்குமுறை வெவ்வேற வடிவங்கள்ல இருக்கலாம் ஆனால் சுதந்திரம் எல்லாருக்கும் ஒன்னுதான். ஒத்ததிர்வுகள் கலையுலகத்துல எப்பவுமே இயற்கைதான், கமல் நடிப்பில் யாரையும் காப்பி அடிக்கவேண்டிய அவசியமில்லை.
வேறொரு பதிவோட பின்னூட்டத்தில பத்து ஆங்கில படங்களப் பார்த்து எடுக்கப்பட்ட படம் அப்படிங்கற கமண்ட் ரொம்ப வருத்தப்படவச்சது, ஆனால் கடைசி வரைக்கும் அந்த நபர், பத்து படங்களோட பேர சொல்லவேயில்லை, சார், அந்த பத்து படங்கள் என்னென்னனு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம். ஒரு வெகுசன படைப்பு பார்வைக்கு வரும்போது எதிர்மறை விமர்சனங்கள் வரத்தான் செய்யும்,வரணும். வந்தால்தான் சீர் தூக்கிப்பார்க்கும் தன்மையும் வளரும், எவ்வளோ குப்பையா படம் எடுத்தாலும் மக்கள் ஏத்துப்பாங்க அப்படிங்கற மோசமான நம்பிக்கையும் ஒழியும். ஆனா, கருத்து சொல்றவங்க யாரும் நானும் பேசுறேன் பேர்வழின்னு குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்ச மாதிரி பேசக்கூடாது. முடிஞ்சா ஆதாரங்கள எடுத்து வைங்க, நம்மளே கமல் சார்கிட்ட போய் உண்மையக் கேட்போம். என்னங்க, நான் சொல்றது சரிதான?
சமீபத்தில் ஒன்பது அல்லது பத்து வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன் (இந்த வரி டோண்டு சார் பதில்கள் மாதிரி இல்லையே..?) த.மு.எ.ச கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர் சொன்னார். கதை எழுதுவதற்கு 24 அல்லது 28 (எண்ணிக்கை சரியாக நினைவிலில்லை) story knots மட்டுமே உள்ளன, நாம் எத்தகைய படைப்பைக் கொண்டுவந்தாலும் அது இதற்குட்பட்ட கலவையாகத்தான் இருக்க முடியும் என்றார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் நண்பர் கூறிய பத்து ஆங்கிலப்படங்கள் மட்டுமல்ல தசாவதரமும் இவற்றுக்குள் அடக்கம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டுமென்பதால்தான்.
கமல்கிட்ட இருந்து அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்கள் மாதிரிதான் எதிர்பார்க்கிறதா நெறயப்பேரு கருத்து சொல்லிருந்தாங்க, நல்லது நானும் ஒத்துக்குறேன். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியடையவில்லையே. அதுவும் தமிழ்நாட்டுலதான ரிலீஸ் ஆச்சு? கமல் சார் தொடர்ந்து கலைப்படமே கொடுத்துக்கிட்டு இருந்தா வடபழனில பொட்டிகடை வைச்சு உக்கார்ந்து ஸீன் பண்ண வேண்டியதுதான். கண்ணாடிப்பூக்கள், குட்டி, மல்லி திரைப்படங்கள் தரத்துல மேம்பட்டு இருந்ததா சொல்ற நாம அந்தப் படங்களுக்கு என்ன மரியாதை காட்டினோம்? பார்த்திபன் சார் “குடைக்குள் மழை”னு ஒரு படம் எடுத்தார். கிட்டத்தட்ட A beautiful mind மாதிரி, ஆனால் என்ன ஆச்சு? கலெக்சன் லெவெல்ல அந்தப் படம் பப்படம் ஆயிடுச்சு! தப்பு யார் மேல? அந்தப் படம் சரியில்லயா? இல்ல வழக்கமான சினிமாவுக்கு பழகுன நம்ம மூளை ஏத்துக்கலயா?
நேத்து விஜய் டிவி ல ஒளிபரப்பான மதன்ஸ் திரைப்பார்வைல K.S.ரவிக்குமார், யூகி சேது, மதன் மற்றும் பார்வையாளர்கள் கலந்துக்கிட்டாங்க, நெறயப்பேர் பாத்திருப்பீங்க. அதுல கவனிக்க வேண்டிய விசயம் ரவிக்குமார் சாரோட முகத்தைதான். ரொம்ப திருப்தியா, சிரிச்சுக்கிட்டே இருந்தார். இவ்ளோ பெரிய பட்ஜெட் படம் படுத்திருந்தா டைரக்டர் இப்படியா சிரிச்சுக்கிட்டு இருப்பாரு? படத்தோட ரிசல்ட் என்னங்கிறது அவர் முகத்துல தெரியுது. பேச்சின்போது யூகி சேது சொன்ன முக்கியமான பாய்ண்ட் - ‘ஆங்கிலம், இந்தி திரைப்படங்களுக்கான ஆடியன்சும், மார்க்கெட்டும் ரொம்ப பெருசு. ஆனா நாம ஆறு கோடி பேர மட்டுமே நம்பி படம் எடுக்கிறோம், ஹாலிவுட்ல எதாவது ஒரு உணர்ச்சிய மையப்படுத்தி எடுக்கப்படற படங்கள் ஒரே சுவை கொண்டது, ஆனால் தமிழ்நாட்டு ரசிகனுக்கு ஒரே படத்துல நெறய சுவைகள் தேவைப்படுது, இது தலைவாழை விருந்து, தமிழ்நாட்டுல வேர்களை வச்சுக்கிட்டு உலக மார்க்கெட்டுக்கு எடுக்கப்பட்ட படம்’ அப்படின்னு சொன்னார். கரெக்ட்தான!
இன்றைய தேதியில் டெக்னிக்கலான முன்னேற்றத்துக்கு இந்தியாவில் தற்போதைய சிறந்த படம் தசாவதரம்தான். இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வரக்கூடிய மாற்றங்களுக்கு இந்தப்படம் ஒரு விதை..! இப்படத்தோட வெற்றி பன்னாட்டு சினிமா கம்பெனிகளின் கவனத்தை தமிழ் படங்கள் மேல திருப்பும். தமிழ் சினிமா ஹாலிவுட் மாதிரி ஒரு கார்ப்பரேட் செக்டாராக மாறும். நிதி பெருத்த நிறுவனங்களின் வருகை புதிய முயற்சிகளுக்கான அடித்தளத்தை உண்டாக்குவது மட்டுமின்றி ஹாலிவுட் மாதிரி ஸ்கிரிப்ட் ரைட்டிங், ஸ்க்ரீன்ப்ளே மேக்கிங் போன்றவற்றை புதிய, தனிப்பட்ட துறைகளா மாற்றலாம். தொழில்நுட்பமும் படங்களின் பட்ஜெட்டும் வளரும் அதே நேரத்தில் நாம் நமது மண்ணையும், மக்களையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிற தரமான படங்களை கொடுப்பதின் மூலமாக ஈரானிய திரைப்படங்களைப்போல் தமிழ்ப் படங்களையும் உலக சந்தையில் நிலைநிறுத்தலாம்.
இந்தப்படம் முடிந்தவுடன் கமலுக்காகவும் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் நான் கைதட்டினேன். நீங்களும் தட்டுங்கள், அது கமல் போன்ற சிறந்த கலைஞனின் உழைப்புக்காக மட்டுமல்ல, எந்தவொரு கலைஞனும் விருதுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பது ரசிகர்களின் அங்கீகாரத்தைதான்..!
ஒர் வேனிற்கால மதிய வேளை...
இப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறாயா?
எதிர்ப்படும் எல்லோருக்குமான புன்னகை இன்னும் மீதமிருக்கிறதா?
சடுதியில் மாறும் காட்சிகள் கொண்ட அறைக்கு வண்ணம் பூசியாயிற்றா?
பிடித்த நடிகை இன்னும் சிநேகாதானா?
சாப்பிடுவது அதே மேரி மெஸ்ஸில்தானே?
ரமணி சந்திரன் சிவசங்கரி படிக்கச் சொல்லி தோழிக்கு சிபாரிசு செய்கிறாயா?
கைகளை ஆட்டி அபிநயங்களோடு பேசுவதை நிறுத்தவில்லைதானே?
‘நெஞ்சமொருமுறை நீ என்றது’ பாடலை முணுமுணுக்கிறாயா?
டோனாபோலாவில் எடுத்த குரூப் ஃபோட்டோ சூட்கேசில் இருக்கிறதா?
.
.
.
இப்போது உயிரோடு இருக்கிறாயா?
*************
மின்சாரம் தடைப்பட்ட பின்னிரவில்...
புறக்கணிக்கப்பட்ட அன்பின் பொதிகளை
ஒரு குழந்தையென நீ சுமந்து திரிவதை
என்னால் தடுக்கமுடியவில்லை.
கைப்பையைத் திறக்கிறாய்...
விடியவே முடியாத இரவுகள்
வரிசைக்கிரமமாய் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒன்றை எடுத்து உதறுகிறாய்
வானிலிருந்து சில நட்சத்திரங்கள் உதிர்வதை
காப்பாற்ற முடியவில்லை.
வாழ்வின் கசப்பான பக்கங்களை நத்தையின்
வேகத்தில் வாசிக்கத்துவங்கி
பெருங்குன்றொன்றின் மீதேறுகிறேன்
சமவெளிகளின் மகத்துவம் தெரியாமல்
என்னைக் காப்பாற்ற வருபவன் கல்லாய் சமையட்டும்.
*************
பருவமழை தொடங்க சில தினங்களே இருக்கும் இன்று...
மிதமிஞ்சிய குற்றவுணர்வுடன்
இதை எழுதிக்கொண்டிருப்பதாய் கூறுவது
நான் கொலையுறுவதற்கு சரியான காரணமாய் இருக்கக்கூடும்.
எனக்கு வாய்த்த சபிக்கப்பட்ட
வாழ்வின் பங்காய்
உனக்கு அன்பைத் தராவிடினும்
காயங்களைத் தராமலிருந்திருக்கலாம்
ஏமாற்றங்கள் அற்ற
துரோகங்கள் அற்ற
பாசாங்குகள் அற்ற
வஞ்சனைகள் அற்ற பெருவெளியில்
அன்பால் நிரம்பிய மேகம் ஒன்றை
இழுத்துச் செல்கிறது சிற்றெறும்பு
கார்காலம் தொடங்குமுன்
புற்றை நிரப்பிவிடும் பேராசையோடு.
© Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008
Back to TOP