2002-2008 டைரிக் குறிப்புகள்
>> Friday, May 30, 2008
ஒர் வேனிற்கால மதிய வேளை...
இப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறாயா?
எதிர்ப்படும் எல்லோருக்குமான புன்னகை இன்னும் மீதமிருக்கிறதா?
சடுதியில் மாறும் காட்சிகள் கொண்ட அறைக்கு வண்ணம் பூசியாயிற்றா?
பிடித்த நடிகை இன்னும் சிநேகாதானா?
சாப்பிடுவது அதே மேரி மெஸ்ஸில்தானே?
ரமணி சந்திரன் சிவசங்கரி படிக்கச் சொல்லி தோழிக்கு சிபாரிசு செய்கிறாயா?
கைகளை ஆட்டி அபிநயங்களோடு பேசுவதை நிறுத்தவில்லைதானே?
‘நெஞ்சமொருமுறை நீ என்றது’ பாடலை முணுமுணுக்கிறாயா?
டோனாபோலாவில் எடுத்த குரூப் ஃபோட்டோ சூட்கேசில் இருக்கிறதா?
.
.
.
இப்போது உயிரோடு இருக்கிறாயா?
*************
மின்சாரம் தடைப்பட்ட பின்னிரவில்...
புறக்கணிக்கப்பட்ட அன்பின் பொதிகளை
ஒரு குழந்தையென நீ சுமந்து திரிவதை
என்னால் தடுக்கமுடியவில்லை.
கைப்பையைத் திறக்கிறாய்...
விடியவே முடியாத இரவுகள்
வரிசைக்கிரமமாய் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒன்றை எடுத்து உதறுகிறாய்
வானிலிருந்து சில நட்சத்திரங்கள் உதிர்வதை
காப்பாற்ற முடியவில்லை.
வாழ்வின் கசப்பான பக்கங்களை நத்தையின்
வேகத்தில் வாசிக்கத்துவங்கி
பெருங்குன்றொன்றின் மீதேறுகிறேன்
சமவெளிகளின் மகத்துவம் தெரியாமல்
என்னைக் காப்பாற்ற வருபவன் கல்லாய் சமையட்டும்.
*************
பருவமழை தொடங்க சில தினங்களே இருக்கும் இன்று...
மிதமிஞ்சிய குற்றவுணர்வுடன்
இதை எழுதிக்கொண்டிருப்பதாய் கூறுவது
நான் கொலையுறுவதற்கு சரியான காரணமாய் இருக்கக்கூடும்.
எனக்கு வாய்த்த சபிக்கப்பட்ட
வாழ்வின் பங்காய்
உனக்கு அன்பைத் தராவிடினும்
காயங்களைத் தராமலிருந்திருக்கலாம்
ஏமாற்றங்கள் அற்ற
துரோகங்கள் அற்ற
பாசாங்குகள் அற்ற
வஞ்சனைகள் அற்ற பெருவெளியில்
அன்பால் நிரம்பிய மேகம் ஒன்றை
இழுத்துச் செல்கிறது சிற்றெறும்பு
கார்காலம் தொடங்குமுன்
புற்றை நிரப்பிவிடும் பேராசையோடு.
10 comments:
கிச்சடீய காணாம் :(
கொலை,தற்கொலை இரண்டுமே தவிர்க்கமுடியாதவை தான்..உன்னை யாரேனும் கொலை செய்யாவிடில் தற்கொலை செய்துகொண்டுவிடு...
ஒரு வேனிற்கால மதியவேளை - மிகவும் கவர்ந்தது. அதில் ஒரு வரி மாற்றிப் போட்டிருந்தால் கவிதை எங்கேயோ போயிருக்கும். யோசியுங்கள்!
abimanyu ean intha kolai veri? :)
நன்றி பரிசல்காரன். நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதியதை அப்படியே பதிவேற்றினேன். மற்றபடி கவிதை படிப்படியாய் கிளர்ந்து சிறப்பாகவே வந்திருப்பதாய் தோன்றுகிறது. உங்கள் எண்ணம் என்னவோ? :)
நல்ல கவிதை.
வாழ்த்துகளுடன்,
ராஜவேங்கடம்
ராஜவேங்கடம் சார், நன்றி.
கவிதைகள் மூன்றும் சிறப்பு. மிக அழகாக எழுதுகிறீர்கள்.
அனுஜன்யா
அனுஜன்யா, தங்களின் வாழ்த்துக்களுக்கும் தொடர் வருகைக்கும் நன்றி. உங்களின் ஊக்கம் அடிக்கடி எழுத வேண்டும் எனும் ஆவலை எழுப்புகிறது.
Post a Comment