மனிதனை நம்பிய பறவை…

>> Saturday, August 25, 2007

எனக்கு அந்த ஊர் புதியது.
அங்கே பறவைகளை வேட்டையாடும் பழக்கம் இருக்கிறது
எனக்கொதுக்கப்பட்ட அறையின் சன்னலோரம்
மரக்கிளையில் ஒரு பறவை அமர்ந்திருந்தது
தப்பிப்பிழைத்த பறவையாய் இருக்கலாம்.
மெல்ல பேச்சு கொடுத்தேன்
தப்பிக்கையில் காதலியைப் பிரிந்த ஆண் பறவை அது
குண்டடியில் பிய்ந்த இறக்கை முளைப்பதற்காய் காத்திருக்கிறது
பிறகு காதலியை தேடவுள்ளது
கிடைக்கவில்லையேல் தற்கொலை புரியவுள்ளது.
உங்கள் காதலுக்கு வந்தனம்
இரவு உணவிற்குப் பின் சந்திக்கிறேன்,விடை பெற்றேன்.
யாரிடமும் தன்னைப் பற்றி பேசாமலிருக்குமாறு கேட்டுக்கொண்டது
சரியென்று தலையசைத்தேன்.
விருந்துண்டு திரும்பி வந்து பார்த்தபோது
வெறுமை பறவையிருந்த இடத்தை நிரப்பியிருந்தது…
என்னவாகியிருக்கும்?
இறக்கை முளைத்து பறந்திருக்குமோ
காதலி வந்து கூட்டிச் சென்றிருப்பாளோ
போகுமுன் எனக்கான நன்றியை
காற்றில் எழுதி கரைத்திருக்குமோ?
இல்லையேல்,
வேதனை தாங்காது தற்கொலை புரிந்திருக்கலாம்
மதுவிருந்தில் நான் அதைப் பற்றி
உளறியதைக் கேட்டிருக்கலாம்.
துரோகி என தன் இறுதிகணத்தில் என்னை சபித்திருக்கலாம்.
எதுவாயினும் சரி…
இனி இவ்வூருக்கு வரக்கூடாது என முடிவு செய்தேன்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP