வசுமதியும் ஒரு மழை நேரத்து மாலை நேரமும்- கமலநாபன்

>> Friday, December 11, 2009

இச்சிறுகதை 20ஆம் நூற்றாண்டின் சிறந்த நூறு சிறுகதைகளுள்(தமிழ்) ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செண்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதே சிறுகதை ஆசிரியரின் "ஒரு மிதமிஞ்சிய நாட்குறிப்பு" சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கதை எழுதியவருக்கும் எங்களுக்குமான உறவு குறித்து பிறிதொரு பதிவில்- விரிவாய்.







வசுமதியும் ஒரு மழை நேரத்து மாலை நேரமும்
-கமலநாபன்





கோடையின் அந்த திடீர் மழையை வசுமதி எதிர்பார்க்கவில்லைதான். எதிர்பார்த்திருந்தாலும் குடையை எடுத்துக்கொண்டு வந்திருக்கமாட்டாள். ஏனெனில் அவளுக்கென்று தனியாக ஒரு குடை இல்லை. இந்த மாலை நேரத்தையும் தாண்டிய முன்னிரவில் ஒரு மரணத்தைப்போல முன்னறிவிப்பின்றி இந்த மழை வந்தது தொந்தரவாய்தான் இருந்தது. கடுமையான புழுக்கமும், காற்றின்மையும், கிழக்கத்திய மின்னல்களும் ஒரு நிச்சய மழைக்கு மாலையிலேயே கட்டியம் கூறியிருந்தும் கூட வசுமதியால் இந்த மழையைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை.

இரண்டாம் நம்பருக்காகக் காத்துக் கொண்டிருந்தபோதே தூறல் விழுவதற்கான ‘கவுண்ட்டெளன்’ தொடங்கி, கடமையாய் சிதறிக்கிடந்த, பயணிகளைப் பின்னும் பயம் காட்டி, ஒடுங்கவைத்தது. ஒரு அவசரமான புறப்பாட்டுக்குத் தயாராய் வந்துநின்ற பஸ்சில் இறங்குகின்ற கும்பலை, மோதிப், பிதுங்கி, ஏறி, இடம் பிடித்து வசுமதி உட்கார்ந்த இரண்டாம் நிமிடம் வானைப் பிளந்துகொண்டு நீரம்புவீச்சுகள் தொடங்கிவிட்டன. காரின் ஷட்டர்களை இழுத்து மூடிக்கொண்டதும், நெருக்கமாய் நிறைந்துபோன பஸ்சின் உட்புறமிருந்து வெளிப்பக்கம் சரியாகத்தெரியாமல் போனதும் மழையின் உக்கிரத்தை வசுமதி உணரமுடியாமல் செய்துவிட்டன.

பஸ் சக்கரங்கள் சாலையின் பள்ள நீர்களில் பதிந்து அவற்றை வெளியேற்றிக் கடாசுகிற சப்தமும், தாள கதியுடன் பஸ்மீது பொழியும் ஒலியும் ‘நல்ல மழை’ என்ற விமர்சனங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நிறுத்தத்தில் பஸ் நின்றுவிட்டுப் புறப்படும்போதும் பாய்ந்து ஏறுகிற பயணிகள் முழுக்க நனைந்து மற்ற பயணிகளின் காட்சிப்பொருளாய் மாறிபோய்க் கொண்டிருப்பது வசுமதிக்கு கவலையைத் தந்தது.

“சே... ஒரு குடை இல்லாதது எவ்வளவு கஷ்டம். இந்த மாசமாவது ஒரு குடை வாங்கிரணும்” அவளும் ஒவ்வொரு மழைக்காலம் வந்து போகும்போதும், தவறாது இந்த நினைப்பையும் நினைத்து விடுகிறாள். ஆனால் காரியத்தில் இறங்க முடிவதில்லை. ஒருமுறை துணிந்து சம்பளம் வாங்கிய அன்றே “இன்னைக்கு எப்படியும் குடை வாங்கிரனும்” என்ற உறுதியோடு அதற்கான பணத்தையும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். தனியாகக் குடைக் கடைக்குச் சென்றுவர என்னவோ போல இருந்தது.. அதனால் அந்த வாரத்து சனிக்கிழமை மாலையில் உடன் பணிபுரியும் செண்பகத்தையும் அழைத்துக்கொண்டு வந்து குடை வாங்கிவிடத் தீர்மானித்திருந்தாள். செண்பகமும் சம்மதித்திருந்தாள். ஆனால் பாவம் அந்த வாரத்தில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய், சீனி இவைகளுக்காக ரேஷன் கடைக்குப் போய் சேர்ந்துவிட்டது அந்தப் பணம்.

அவளுக்கு வருகிற வருமானம் ரொம்பச் சொற்பம். நகரத்தைத் தொட்டுக் கொண்டிருந்த கிராமம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த ஒரு பிஸ்கட் கம்பெனி ஒன்றில் வசுமதிக்கு வேலை. வீட்டிலிருந்து புறப்பட்டால் இரண்டு பஸ்கள் மாறி வேலைபார்க்கும் இடத்திற்குப் போக வேண்டும். இந்த வேலையும் நிர்ப்பந்தங்களின் பேரில், இத்தனை தூரம் தள்ளி வந்து பார்க்க நேர்ந்திருக்கிறது. அவள் அப்பாவின் சம்பளத்தைக்கொண்டு, அவளது அம்மா, தனது தம்பி, தங்கைகளின் அன்றாட சாப்பாட்டுக் கடமைகளையும் கழித்து வசுமதிக்கு ஒரு கல்யாணமும் செய்துவைக்க முடியாது என்பதைச் சத்தியம் செய்து சொல்லலாம். பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருக்கிற வசுமதி, இந்த வயதில் இப்படி வேலைக்குப் போகிற எத்தனையோ பேர்களின் கூட்டத்தில் ஒருத்தியானாள்.
“இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம்... சொல்லப்போனா அதுக சம்பாத்தியம் வந்துதான் கொஞ்சமாவது அனுசரிச்சுப்போக முடியுது”
அப்பா சமாதானப்படுத்திக் கொண்டார்.

வயதுக்கு வந்த மகள் வேலைக்குப் போவது வயிற்றில் பயம் கவ்வச் செய்கிறது என்றாலும் மாதாமாதம் மகள் கொண்டுவந்து தருகிற பணம்தான் செலவுகளை ஓரளவு சமாளிக்க உதவுகிறது என்பதால் பேசாமல் இருந்து வந்தாள் அவளது தாய்.

“கல்யாணத்துக்காகப் பணம் சேர்த்துக் கொள்வதற்காகத்தானே வேலைக்குப் போறோம்... அப்பாவுக்குப் பாரமில்லாம இருக்கணும்” என்பது வசுமதியின் எண்ணம். ஆனால் வேலைக்குப் போய் வந்த இந்த ஒரு வருடத்தில் கல்யாணத்துக்கென்று ஒரு பைசா கூட அவளால் சேமிக்கமுடிவதில்லை. மாதந்தோறும் வாங்குகிற சம்பளத்திற்கு தயாராய் செலவினங்கள் எப்போதும் பட்டியலில் இருக்கும். செலவெல்லாம் போக மீந்து போகிற அம்சம் என்றைக்கும் தலை காட்டியதில்லை. வலுக்கட்டாயமாய் இவளும் போஸ்ட் ஆபிசில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கியிருந்தாள். சேமிப்பு திருமணத்துக்கானது, என்று பெயரளவுக்கு இருந்தாலும் இடையிடையே ஏற்படுகிற ஆஸ்பத்திரி செலவுகளும், தம்பி தங்கைகளின் படிப்புச் செலவுகளும், தலைதுக்கி அவளது சேமிப்பைத் தாக்கி சேதப்படுத்திவிடுகின்றன. இதில் ஒரு குடை வாங்குவதென்பது நிச்சயம் தூரமானதுதான்.

டிரைவருக்கு எதிரில் கண்ணாடியில் வழியும் நீர்ப்பிரவாகத்தை வைப்பர்கள் மறுத்து மறுத்து தள்ளும் இடைவெளியில், நீர்ப் பூக்களைத் தார் ரோட்டில் கொட்டிச் சிதறியும், கட்டிட முகப்புகளில் நீர்த்தோரணம் கட்டிக்கொண்டும் பெய்கிற மழையை வெறித்தாள் வசுமதி. பஸ் வைகை ஆற்றைக் கடந்து மழைக்குளியலை அனுபவிக்கும் பெரிய சிலையைக் கடந்து தண்ணீரை சாலையோரங்களுக்கு வாரி அடித்தபடி சென்று நின்றது. லேசாக ஷட்டரை உயர்த்தி, இடுக்கினூடே எந்த இடம் எனப் பார்த்துக்கொண்டாள். தான் இறங்க வேண்டிய இடம் வர இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும், என்றாலும் அதற்குள் ஓய்வதற்கான அறிகுறியை அந்தக் கோடைமழை காட்டவில்லை என்பதையும் உணர்ந்தாள்.

மனதுக்குள் துளிர்க்கத் தொடங்கிய பதட்டததை மறைத்துக்கொள்ள மறுபடியும் டிரைவரின் முகப்புக்கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். தன் குடும்பத்தின் இரவுச்சாப்பாட்டுக்காக அந்தக் கடும் மழையிலும் ரிக்ஷா இழுக்கிற அந்த மனிதனைக் கண்டபோது மனம் கனத்தது.
‘போய்ச் சேருவதற்குள் மழை நின்றுவிட்டால் பிரச்சனையில்லை.’

அவள் கவலையோடு காத்திருந்தாள். பஸ் அவள் இறங்கவேண்டிய நிறுத்தத்தில் நின்றபோதும் மழை கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்ததைப் பார்த்துக்கொண்டே தயங்கியபடி சகபிரயாணிகளைப் பின் தொடர்ந்து இறங்கினாள். கையில் வைத்திருக்கிற கைப்பையைத் தலைக்கு மேல் கவிழ்த்துக்கொண்டு விருட்டென்று இறங்கிய சுருக்கில் எதிரில் தென்பட்ட ஒரு மிட்டாய்க் கடையின் சார்பில் ஏற்கனவே மழைக்காக ஒண்டிக் கொண்டிருந்தவர்களோடு தானும் போய் ஒட்டிக்கொண்டாள். அதற்குள் அவள், தலை, முகம், தோள், முன்கைகள் இவையெல்லாம் மழைநீர் பரவி, நெற்றிப்பொட்டை லேசாகக் கரைத்துக்கொண்டு மூக்கின்மீது வழிந்தது.

“சே, சரியான மழையில் வந்து மாட்டிக்கொண்டோமே,” என்று மனதுக்குள் கவலைப் பட்டுக்கொண்டே தலையிலும், முகத்திலும் வழிகிற நீரை நனையாமல் வைத்திருக்கிற கைக்குட்டையால் கவனமாகத் துடைத்துக்கொண்டாள். அவளுக்கு இவ்வாறு தன் முகத்தில் தண்ணீர் விழுந்து, மாலையில் லேசாக ஒற்றியிருந்த பவுடர் அழிந்து ஒப்பனை கலைந்து போனதும், தன் ரவிக்கை தோள்புறம் முழுவதுமாக நனைந்துபோனதும் சங்கடத்தைத் தந்தது. சுற்றிலும் நிற்கிற பல ஆண்களும், இவளையும் இவள் கூட நிற்கிற மற்றப் பெண்களையும் இவர்களின் மழையில் நனைந்த கோலம் தந்த சற்று மிகையான கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்டு வெறித்தார்கள். இவளுக்கு மிகவும் வெட்கமாகப் போய், சற்றுதூக்கிப் பிடித்திருந்த முன்புறச்சேலை முனையை நேர்படுத்தி கால்கள் தெரியாமல் செய்துகொண்டாள். தோளை மறைக்க சேலை முகப்பால் மூடிக்கொண்டாள். சற்றுப் பாதுகாப்பாக உணர்ந்தாள்.

கையில் கைக்கடிகாரம் இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்து, பக்கத்தில் தெரிந்த சைக்கிள் கடையின் மேஜையின்மேல் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்து ‘ஏழு’ என்று அறிந்துகொண்டாள்.
“ஐயயோ, ஏழாச்சு போல இருக்கே... ரொம்பநேரமாச்சு... இப்படி மழை வரும்னு தெரிஞ்சா ஓவர்டைம் கூடப் பார்த்திருக்கவேணாம்...சே..” இப்படி சலித்துக்கொண்டாள் அவள்.

வழக்கமாக அவள் நான்கு மணிக்கு வேலை முடிந்ததும் புறப்பட்டு 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவது வழக்கம். சமீபகாலமாக அவள் வேலை பார்க்கிற அந்த பிஸ்கட் கம்பெனி அதிகமான உழைப்பை அவளிடமிருந்து எதிர்பார்க்கிறது. ஆறு மணி வரை ஓவர்டைம் செய்யவேண்டியிருந்தது. அப்படி அந்த இரண்டு மணிநேர அதிகபட்ச வேலை செய்ய மனம் விரும்பவில்லைதான். இருந்தாலும், இதனால் கிடைக்கிற உபரி வருமானத்துக்காகவாது அவள் அந்த ஓவர்டைம்களை ஏற்றுக்கொள்கிறாள். இன்னும் அதிகமான நேரம்கூட அவள் வேலை பார்க்கத்தயார். ஆனால் அந்த தொழிற்சாலை இருக்கும் பகுதியிலேயே குடியிருக்க முடிந்தால் அப்படிச்செய்திடுவாள். அவள் அப்பாவிற்கோ ஒரு வாடகைக் குடியிருப்பை அந்த இடத்தில் ஏற்படுத்திக்கொள்வது என்பதை நினைத்துக் கூடப்பார்க்கமுடியாது.

வசுமதிக்குத் திடீரென்று ஒரு எண்ணம் பிறந்தது. வீட்டிலிருக்கிற அவள் அம்மாவோ, அல்லது அவள் தம்பியோ ஒரு குடையுடன் அவளைத்தேடி வந்து பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பார்களோ என்று எதிர்பார்த்து சுற்றிலும் தேடிப்பார்த்தாள். அப்படி யாரும் நிற்காதது கண்டு அவள் மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் அடைந்தாள். அப்படி இவளுக்காக அவள் தாயோ, தம்பியோ அல்லது அவள் தந்தையோ வந்து நின்று இவளை அழைத்துச்செல்ல வேண்டும் என்று இவள் மனம் எதிர்பார்த்திருந்தது. அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் சற்றுக்கோபத்தையும் தந்தது.

மணி இப்போது ஏழரை ஆகியிருந்தது. வானம் இருட்டுக்குள் ஒளிந்துகொண்டு நீரை வாரி இறைத்தது. மழையின் உக்கிரம் சற்றுக் குறைந்திருப்பதாகத் தெரிந்தது. ஆனால் உடன் நின்றுவிடும் சாத்தியம் தென்படவில்லை. அவள் அருகே நின்றிருந்த நாலைந்து பெண்களையும் சில இளைஞர்களையும், அவர்கள் வீட்டிலிருந்து யாராவது குடையுடன் வந்து அழைத்துச் சென்றுவிட்டார்கள். அந்தச்சிறிய கடையின் முன் மழைக்காக ஒதுங்கியவர்களில் பெண் என்று அவள் மட்டுமே நின்றிருந்தாள். அதற்கு அருகில் வேறு கடைகள் இல்லை. சற்றுத்தள்ளி இருந்த ஒரு கடையில் சில பெண்கள் ஒண்டி நிற்பதைக் கண்டாள். தற்போது நின்று கொண்டிருக்கும் கடையிலேயே தொடர்ந்து நின்றிருக்க அவளுக்குக் கூச்சமாகவும், அவமானமாகவும் இருந்தது. தன்னை மட்டும் குடையுடன் வந்து யாருமே அழைத்துச்செல்லாதது, அந்தச் சூழலில் தன் மதிப்பைக் குறைத்துவிட்டதாக உணர்ந்து அதனால் ஏற்பட்ட அவமானத்தினால் துடித்தாள். அவள் அந்த இடத்தை விட்டுச் சட்டென்று அகல எண்ணம் கொண்டு மழையில் இறங்கி இருபுறமும் மழைக்கு ஒதுங்கிக்கொண்டிருந்த மனித முகங்களையும் இவளுக்காகப் பரிதாபப்பட்டும், அவள் அவசியமில்லாமல் இப்படி அதிகப்பிரச்ங்கித்தனமாக மழையில் நனைந்து கொண்டே செல்வதுபற்றி விமர்சித்தும் பார்க்கிற கூட்டத்தையும் மனிதர்களையும் லட்சியம் செய்யாமல் தனது கையில் பிடித்திருந்த கைப்பையால் தலைக்குமேல் பெய்கிறமழையில் ஒரு பகுதியை மட்டும் மறைத்தபடி ‘விடு விடு’ என்று வீடு நோக்கி நடக்கத்தொடங்கினாள்.

அந்த பஸ் நிலையத்திலிருந்து அவளுடைய வீடு எட்டு முதல் பத்து நிமிட நடையிலிருந்தது. ரோட்டிலேயே அரை பர்லாங் தூரம் சென்று வலது பக்கம் திரும்பி, புதிதாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உருவாகும் கட்டிடங்களைக் கொண்ட காலனியின் கடைசிப்பகுதியில்தான் இவள் குடியிருக்கும் தெருவும் இவளது வீடும் இருந்தன. இவள் ரோட்டில், தனியாக, முழுவதும் நனைந்து போய் முகத்திலிருந்து வழிகிற நீரை துடைத்துவிட்டபடியே நடந்து, அந்தப் பரந்த சாலையிலிருந்து காலனிக்குப் பிரிகிற கிளைச்சாலையில் அவள் திரும்புவதற்கும் மின் தடை ஏற்பட்டு ‘குப்’பென்று முழு இருட்டு சூழ்ந்துகொள்வதற்கும் சரியாக இருந்தது.

அதிர்ந்து போனாள் வசுமதி. மிகப்பயமாக உணர்ந்தாள். இப்படி ஒரு நாளும் அனுபவித்தறியாத பய உணர்ச்சியும், மிகையான கற்பனைகளும் அவளுக்கு மிகவும் பலவீனத்தைக் கொடுத்தன. அவள் ஒரு சிறு குழந்தையின் மனநிலைக்கு இறங்கிக் கொண்டிருந்தாள். பளீரிடுகிற மின்னலும், முனை மழுங்கிய ஊசிக்கும்பலாய் முகத்தில் விசிறியடிக்கிற மழையும் இன்னும் பயத்தையும் கவலையையும் தந்தன.

தனியாக மழைவிடுமுன் தான் இப்படி நடக்கத் துணிந்தது குறித்து விசனப்பட்டாள். திடீரென்று தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்டு அம்மணத்தில் நிற்பதுபோல் பாதுகாப்பின்மையை உணர்ந்துகொண்டபோது அழுகையாய் வந்தது. நடையை எட்டி எட்டி வைக்கத்தொடங்கினாள். முன்புறத்துச் சேலையை, இருட்டு தந்த தைரியத்தில் முட்டுக்குக் கீழ்வரை தாராளாமாக உயர்த்திக்கொண்டாள்.

சற்றுதூரம் நேரே நடந்துபோய் இடதுபுறமாய்த் திரும்பி, அந்தப் புது வீடுகளைக் கடந்து வலதுபுறம் திரும்பினால் தெரியும் சிறிய வீடுகளும், குடிசைகளும் இருக்கும் பகுதியில்தான் அவள் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில் அவர்களுக்கென்று இருந்த நிலத்தில் பல வருடங்களுக்கு முன் போடப்பட்டிருந்த மேற்புரம் ஓலை வேய்ந்திருந்த வீடுதான் அவர்கள் வீடு.

காற்று மிகவும் வேகமாக வீசுவது தெரிந்தது. வெறும் வெளியில் தன்மீது படர்ந்த காற்றின் வேகத்தை உணரமுடியாமல் போனாலும் சாலையின் ஓரத்தில் இருந்த தென்னை மரங்கள், பளீர் பளீர் என்று ஒளிர்கிற மின்னல் ஒளியில் தலைவிரித்தாடுவது காற்றின் உக்கிரத்தை உணர்த்தியது. காற்று உடல் மீது ஈரத்துணியை உரசுகிறபோதெல்லாம் சில்லிடுகிற குளிர் அவளை வெறுப்பின் எல்லைக்கே கொண்டு நிறுத்தியது.

இருட்டில் பாதை சரியாகத்தெரியவில்லை. நிறைய மழை நீர் சேர்ந்து தெருப்பள்ளங்கள் நீர் மூடியிட்டுக் கொண்டிருந்தன. வயல்களாய் இருந்த பூமியாதலால், களியும் வண்டலும் கலந்த சேறாய் மழையில் ஊறி நின்று கால்களைக் கவ்விக்கொண்டன.

அஜாக்கிரதையாகவோ, அன்றி சரியாகச் சமன் செய்யாமலோ தரையில் கால்களைப் பதிக்க முயன்றால் வழுக்கும் என்பதை இரண்டு மூன்று தப்படிகளில் தெரிந்து கொண்டதால் ஜாக்கிரதையாக நடக்கவேண்டியிருந்தது. அதனாலேயே நடைவேகம் குறைந்து, மழையின் முழுத்தாக்குதலும், நீராபிஷேகம் போல தலையில் கொட்ட நனைந்துகொண்டே நடந்தாள் வசுமதி.
அவள் பயமும் கவலையும் ஒரு எல்லையைத் தாண்டியபோது மனதில் எரிச்சலும் ஆத்திரமும் உண்டாயின.

தன்னை இப்படித் தனியே தவிக்கவிட்ட தன் தாயையும், அப்பாவையும் தம்பியையும் மனதுக்குள் திட்டினாள். தன் போன்ற வயதுக்கு வந்த பெண்ணை வாழ வைத்துப் பார்க்காமல் இப்படி வெயிலிலும் மழையிலும் தவிக்கவிட்டு தன் சம்பாத்தியத்தை உறிஞ்சிக்கொள்கிறார்கள் என்று நினைத்தாள். தனக்குச் சரியான வயதில் கல்யாணம் நடந்திருந்தால் தான் அவதிப்பட நேர்ந்திருக்காது என்று என்ணினாள்.

திடீரென்று செருப்பு, சேற்றுக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டது. ஒரு காலை நன்றாக ஊன்றி, அதை வெளியில் இழுக்கச் செய்த முயற்சியில் சற்று சரிந்தபோது தோளில் மாட்டியிருந்த பை கழன்று சேற்றுக்குள் விழுந்தது. அதை மீண்டும் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தபோது, அந்த ‘ஸ்லிப்பை’ நினைத்து அவமானம் பொங்கிவர அழுகை பீறிட்டது. வசுமதி ஓசையின்றி அந்த மழையினூடே குலுங்கிக் குலுங்கி அழுதாள். இப்பொழுது மீண்டும் மின் இணைப்பு ஏற்பட்டு வெளிச்சம் தோன்றியது.

இப்படி ஒரு இரக்கமற்ற வீட்டில் தான் பிறந்திருக்கவேண்டாம். “:எல்லோரும் தான் தின்றிகள். இந்த அம்மாவும் அப்பாவும்... வரட்டும் பார்த்துக்குறேன்” என்று குமுறியபடி வீட்டை நெருங்கிகொண்டிருந்தாள். அந்த இருட்டிலும், மழையிலும் வீட்டுப்பகுதில் ஏற்பட்டிருக்கிற ஜனசந்தடி அவளுக்குள் திடீரென்று ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தி அவள் மனதில் ஒரு பயம் திடீரென்று கப்பிக்கொண்டது. ஏதோ ஒரு அசாதாரணம் தென்பட்டவுடன் அவள் மனக்குமுறலும், மழையும், இருட்டும் மறந்து போய் படபடபோடு எட்டி நடைபோட்டு வீட்டை அடைந்தாள். அங்கே-

அவள் தாயும், தங்கையும், தம்பியும், தந்தையும் ஆளுக்கொரு பொருளாக, வீட்டினுள் புகுந்திருந்த வெள்ளத்தினின்றும் அப்புறப்படுத்திப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருப்பதைக் கண்டாள். வெகுநாட்களாக மாற்றப்பட்டிராத அந்த வீட்டின் மேற்கூரையில் பாதி முழுவதுமாகப் பிய்ந்து பறந்துபோய் வெறும் சுவர்களுடன் வீடு பாதி மொன்னையாய் நின்றிருந்தது.

விக்கித்துப்போய் நின்றுவிட்டாள் வசுமதி. இதுவரை தோன்றியிருந்த துயரம் எல்லாம் வடிந்துபோய் புதிய வேதனை நெஞ்சில் தோன்றி இதயம் கனத்தது அவளுக்கு.

8 comments:

Rajan December 11, 2009 at 4:10 AM  

சமீபத்தில் வாசித்த மிகச் சிறந்த எழுத்து

யாத்ரா December 11, 2009 at 11:01 AM  

நண்பா மிகச் சிறந்த எழுத்து, கதை, உணர்வுகள் அதன் கொந்தளிப்புகள், காட்சி மாற்றங்கள், அது உண்டாக்கும் சலனங்கள், மனக்கிலேசங்கள், நிர்க்கதி நிலை, ஆற்றாமையில் பொங்கும் கோபம், அக்கோபத்திற்கு காரணமானவர்களின் நிலை,,,,, இப்படி வசுமதியின் மனதைத் தொடர்ந்து படித்து வந்தது, என்ன சொல்வது, இக்கதைக்குள் குடை மழை நடத்தல் எல்லாம் படிமங்களாகி வேறு வேறு உணர்வுகளை நிரப்புகிறது.
மிக்க நன்றி பகிர்வுக்கு.

பிறகு அபிமன்யூ பக்கங்களைப் படித்தேன், உறைந்து உறைந்து உருகி உருகி வாசித்தேன், ஏன் அவர் தற்போது எழுதுவதில்லை.

அபிமன்யு December 13, 2009 at 10:51 PM  

நண்பா! எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் பதிவு..அதுவும் என்னை மிகவும் பாதித்த கமலநாபனின் சிறுகதை..அவருக்கும் நமக்குமான உறவு குறித்து இன்னும் விளக்கமாக எழுது..

அபிமன்யு December 13, 2009 at 11:11 PM  

யாத்ரா,


உங்கள் கருத்துக்கு நன்றி.

நீண்ட நாட்களாய் எழுதாதிருக்க ஒன்றும் சிறப்பான காரணங்களில்லை..சில வாழ்நிலை காரணங்களே..வெகுவிரைவில் எழுதுவேன் என்று நினைக்கிறேன்..

anujanya December 14, 2009 at 2:19 AM  

வசுமதியுடன் கூடவே மழையில் நனைந்து, அவள் அனுபவித்த உணர்வுகளை நாமும் அனுபவித்தது போல் இருக்கு. வெளியில் வெய்யில் அடிப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி சந்திரா. அபிமன்யுவும் சீக்கிரம் நிறைய எழுதத் துவங்கட்டும்.

அனுஜன்யா

chandru / RVC December 14, 2009 at 2:58 AM  

ராஜன், தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

chandru / RVC December 14, 2009 at 2:59 AM  

யாத்ரா, அந்த கதைக்குள் வசுமதி மட்டுமே இயங்கவில்லை. சரியான புரிதலுக்கு நன்றி. அபிமன்யூ உங்கள் கேள்விக்கு பதில் கூறியிருக்கிறார். :)

chandru / RVC December 15, 2009 at 8:57 PM  

அனு, நன்றி. :)

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP